இங்கு வந்து வழிபட்டுச் செல்லும் பக்தர்களுக்கு உள்ள திருமணத் தடை, குழந்தைப்பேறு இல்லாமை, தீராத மனக் கவலை ஆகிய பிரச்னைகள் நீங்குகின்றன. வாழ்க்கையில் இதற்கு முன்பு இருந்த நிலை மாறி தொழில் மேன்மை, வேலையில் முன்னேற்றம், செல்வவளம் சேரல் என நற்பலன்களைப் பெறுகிறார்கள். பேச்சில் பிரச்னை இருக்கும் குழந்தைகளை இங்கு அழைத்துவந்து வழிபடச் செய்தால் விரைவில் பேசும் திறன் வாய்க்கும் என்றும் சொல்கிறார்கள்.
மேலும் இங்கு வந்து சிறிது நேரம் அமர்ந்து முருகனை மனதில் இருத்தி தியானம் செய்தால் மனம் அடங்கி பேரானந்தத்தை அனுபவிக்க முடியும் என்கிறார்கள் பக்தர்கள். பங்குனி உத்திரம், தைப்பூசம், கிருத்திகை ஆகிய திருநாள்கள் இங்கே வெகுவிசேஷம். அதேபோல், பெளர்ணமியில் கிரிவலம் வந்து வணங்குவதும் விசேஷ வழிபாடாகும்.

இந்த ஆலயத்தில் இருக்கும் தீர்த்தக் கிணற்றின் நீரானது, புனிதமாகக் கருதப்படுகிறது. இந்த மலைக்கோயிலில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் பவானி கூடுதுறையில் சங்கமிக்கும் அமிர்த நதி, காவிரி, பவானி ஆகிய மூன்று நதி தீர்த்தங்களும் இந்தக் கிணற்றில் ஊறுவதாகவும், அதனால் இது புனிதத்தன்மை மிக்கதாகவும் கருதப்படுகிறது. இந்த நீரைக் கொண்டுதான் தினமும் வேலாயுத சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. நாமும், நமது வெவ்வினைகள் யாவும் தீர, வட்டமலை சென்று வேலாயுத சுவாமியை வழிபட்டு வருவோம். வாழ்க்கை வளமாகும் நலமாகும்.