India
oi-Rajkumar R
அமராவதி: இந்தியாவில் தங்க உற்பத்தித் துறையில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜொன்னகிரி தங்கச் சுரங்கத்தை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்துள்ளார். நாட்டின் முதல் தனியார் தங்கச் சுரங்கம் என்ற பெருமையை பெற்றுள்ள இந்தத் திட்டம், ஆந்திராவின் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ராயலசீமா பகுதியில் சந்திரபாபு நாயுடுவின் செல்வாக்கு மேலும் அதிகரித்துள்ளதாக சொல்கின்றனர்.
இந்தியாவில் ஆண்டுதோறும் தங்கத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், அந்த தேவையின் பெரும்பகுதி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. இதனால் அந்நியச் செலாவணி செலவு அதிகரித்து வருகிறது.
இந்த சூழலில் உள்நாட்டிலேயே பெரிய அளவில் தங்கம் உற்பத்தி செய்யும் முயற்சியாக ஜொன்னகிரி திட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கர்னூல் மாவட்டத்தின் துக்காலி மண்டலத்தில் அமைந்துள்ள ஜொன்னகிரி பகுதி, கடந்த சில ஆண்டுகளாக தங்க வளம் நிறைந்த பகுதியாக அடையாளம் காணப்பட்டு வந்தது.

ஆரம்பகட்ட புவியியல் ஆய்வுகளின் அடிப்படையில், இந்தப் பகுதியில் மட்டும் சுமார் 50 டன் தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக சுமார் 1,500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் இதுவரை 500 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த ஆய்வுகளில் சுமார் 13 டன் தங்க இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீதமுள்ள 1,000 ஏக்கர் பகுதியில் இன்னும் முழுமையான ஆய்வுகள் நடைபெறவில்லை. அந்த ஆய்வுகள் முடிவடைந்த பிறகு தங்க இருப்பு மேலும் அதிகரிக்கலாம் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இந்நிலையில் இந்த சுரங்கத் திறப்பு விழாவில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, ராயலசீமா பகுதியின் எதிர்கால வளர்ச்சிக்கு ஜொன்னகிரி முக்கிய அடித்தளமாக அமையும் என்று கூறினார். “ராயலசீமாவை ரத்தினசீமாவாக மாற்றும் பயணம் இங்கிருந்தே தொடங்குகிறது. ஒருகாலத்தில் இந்த பகுதி சுவர்ணகிரி என்று அழைக்கப்பட்டது. அசோக சக்கரவர்த்தியின் ஆட்சிக்காலத்திலேயே இந்தப் பகுதி தங்க வளத்திற்காக அறியப்பட்டிருந்தது” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், பழங்காலத்தில் இந்தப் பகுதியில் தங்கம் மற்றும் ரத்தினக் கற்கள் விற்பனை செய்யப்பட்டதாக வரலாற்று ஆதாரங்கள் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். “ஒருகாலத்தில் கர்நாடகாவின் கேஜிஎஃப் தங்கச் சுரங்கம் குறித்து நாடு முழுவதும் பேசப்பட்டது. இனி ஜொன்னகிரி குறித்து பேசப்படும் காலம் தொடங்கியுள்ளது” என்றும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.
தற்போது இந்தச் சுரங்கத்தில் ஆண்டுக்கு சுமார் 400 கிலோ தங்கம் உற்பத்தி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இந்த உற்பத்தி அளவு ஆண்டுக்கு ஒரு டன் வரை உயர்த்தப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்புகளும் பெருமளவில் உருவாகும் என்று அரசு எதிர்பார்க்கிறது. தற்போது சுமார் 800 பேர் நேரடியாக பணியாற்றி வருகின்றனர்.
விரைவில் மேலும் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும், எதிர்காலத்தில் 5,000-க்கும் மேற்பட்டோர் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். தங்கச் சுரங்கத்தை மையமாகக் கொண்டு நகைத் தொழில், உலோகச் சுத்திகரிப்பு மையங்கள் மற்றும் தொடர்புடைய தொழில்கள் உருவாகும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது. இதனால் ஜொன்னகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி வேகமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில், ஆந்திராவில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். மாநிலத்தில் மிகப்பெரிய ட்ரோன் நகரம் அமைக்கப்படும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கர்னூலில் உயர்நீதிமன்ற கிளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். மேலும், 2028-ஆம் ஆண்டுக்குள் ராயலசீமா பகுதியில் புதிய இரும்புத் தொழிற்சாலை அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இதன் மூலம் தொழில்துறை வளர்ச்சியில் ராயலசீமா புதிய இடத்தைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம் என்ற அடையாளத்துடன் தொடங்கியுள்ள ஜொன்னகிரி திட்டம், ஆந்திராவின் பொருளாதார வரைபடத்தை மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. அதேசமயம், இந்தியாவின் தங்க இறக்குமதி சார்பைக் குறைக்கும் முயற்சியிலும் இந்தத் திட்டம் முக்கிய பங்காற்றும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

