கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி 1990களில் அதிக அளவில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். சச்சின் தெண்டுல்கரின் நெருங்கிய நண்பர் என்று கருதப்படும் வினோத் காம்ப்ளி, மும்பையில் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வந்த வினோத் காம்ப்ளி மது பழக்கத்திற்கு அடிமையாகி, தனது உடல் நலத்தை கெடுத்துக்கொண்டார். கடந்த ஆண்டு வினோத் காம்ப்ளிக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டு மும்பை அருகில் உள்ள தானே மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
ஆனால் அவர் இன்னும் முழுமையாக குணமாகவில்லை. அவருக்கு மூளையில் ரத்தக்கட்டி இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அதோடு மூளையில் பக்கவாதம் ஏற்பட்டு இருப்பதாகவும் வினோத் காம்ப்ளியின் நண்பர் மார்கஸ் அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “அவருடைய நண்பர்கள், பெரும்பாலும் கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய ஒரு வாட்ஸ்அப் குழுவை நான் உருவாக்கியுள்ளேன்.
பெயர்களைக் குறிப்பிடாமல் சொல்வதென்றால், அவர்கள் நிதி ரீதியாக நிறைய பங்களிக்கிறார்கள். அவருடைய ஞாபகசக்தி நன்றாக இல்லை. ஆனால் கடந்த ஆறு மாதங்களாக அது குறையவும் இல்லை. அவரால் அதிகம் நினைவில் கொள்ள முடியாது. ஆனால் ஏதாவது நினைவுக்கு வந்தால், அது அவருக்குப் புரிந்துவிடும். இல்லையென்றால், அவருக்குச் சிரமமாகிவிடும். வினோத்தின் மூளையில் ரத்தக்கட்டி உள்ளது, அவர் ஆரம்பத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால் அதை அகற்ற முடியவில்லை. மேலும், அவருக்கு மூளை பக்கவாதம் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர் கூறியுள்ளார்”‘ என்று கூறினார்.
வினோத் காம்ப்ளி இப்போது குடிப்பதை நிறுத்திவிட்டார், ஆனால் சில சமயங்களில் கீழே விழும்போது, வழிப்போக்கர்களிடம் புகைப்பிடிக்க உதவுமாறு கேட்பார். அவர் ஆட்டோ ஓட்டுநர்களிடம் சிகரெட் கேட்பார். அவர்களும் ‘வினோத் காம்ப்ளி’க்கு உதவுவதாக நினைத்து மகிழ்ச்சியுடன் கொடுப்பார்கள். ஆனால் அவர்கள் என்ன தீங்கை ஏற்படுத்துகிறார்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இப்போது பாதிப்பு அவரது மூளைக்குத்தான் என்று பிரபல நரம்பியல் டாக்டர் ஆதில் சாக்லா தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் வினோத் காம்ப்ளி வேலையும் இல்லாமல் சிரமப்பட்டார்.