International
oi-Hema Vandhana
வாஷிங்டன்: நிலவை நாம் எப்போதுமே ஒரே மாதிரிதான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.. ஆனால் அந்த நிலவில் கடந்த 2024-ம் ஆண்டு மிகப்பெரிய மாற்றம் ஒன்று நடந்திருக்கிறது… விண்கல் போன்ற ஒரு பொருள் நிலவில் பயங்கரமாக மோதிவிட்டது.. இதனால் 728 அடி அகலத்துக்கு நிலாவில் பள்ளம் ஒன்று உருவாகியிருக்கிறதாம்.. இதைவிட ஆச்சரியம் ஒன்று உள்ளது.. அது என்னவென்று பார்ப்போம்..!!
கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் 11 முதல் மே 22-ம் தேதிக்குள் நிலவின் கிழக்குப் பகுதியில், விண்கல் ஒன்று மோதியிருக்கிறது.. அநேகமாக சிறுகோள் அல்லது வால்நட்சத்திரத்தின் ஒரு பகுதி நிலவில் வந்து மோதியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

நிலவில் மோதிய விண்கல்
இந்த மோதல் காரணமாக சுமார் 728 அடிக்கு அதாவது 222 மீட்டர் அகலத்துக்கு பள்ளம் உருவாகியிருக்கிறது.. அதன் அதிகபட்ச ஆழம் 141 அடி, அதாவது 43 மீட்டர்..
இதை இன்னும் எளிமையாக சொல்வதானால், 2 கால்பந்து மைதானங்கள் சேர்ந்தால், எந்த அளவுக்கு அதிகமான அகலம் இருக்குமோ, அந்த அளவுக்கு இந்த பள்ளம் விழுந்துள்ளதாம்..
இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த மோதல் நடந்தபோது யாருக்குமே அது தெரியவில்லை. இத்தனைக்கும் நிலவைச் சுற்றி நாசாவின் விண்கலம் தொடர்ந்து கண்காணித்து கொண்டுதானிருக்கிறது.. அப்போதும் தெரியவில்லை.. அந்த புதிய பள்ளம் உருவானது உடனடியாகவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
பல மாதங்களுக்கு பிறகுதான் பழைய போட்டோக்களையும், புதிய போட்டோக்களையும் ஒப்பிட்டுப் பார்த்தபோதுதான், விஞ்ஞானிகளுக்கு இந்த மாற்றமே தெரிந்துள்ளது. சமீப காலத்தில் சூரியக் குடும்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய புதிய தாக்கப் பள்ளமாக கருதப்படுகிறது.
நிலவில் பெரிய பள்ளம்
இருந்தாலும் இவ்வளவு பெரிய பள்ளம் உருவானது எப்படி யாருக்கும் தெரியாமல் போனது என்பது வியப்பாகவே உள்ளதாம்.. நாசாவின் விண்கலம் நிலவைச் சுற்றி வந்து அதன் மேற்பரப்பை தொடர்ந்து படம் எடுத்து வருகிறது. 2024 மே மாதத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்களில் அந்த குறிப்பிட்ட பகுதி நன்றாகவே பதிவாகியுள்ளது. ஆனாலும் அப்போது புதிய பள்ளம் இருப்பதை யாருமே கவனிக்கவில்லையாம்.
ஏனென்றால், நிலவின் கோடிக்கணக்கான படங்கள் நாசாவிடம் இருப்பதால், அவற்றில் ஏற்பட்டுள்ள சின்ன சின்ன மாற்றங்களைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான வேலை இல்லை. 2025 ஆகஸ்டில் பழைய படங்களுடன் புதிய படங்களை ஒப்பிட்டுப் பார்த்தபோதுதான் இந்த பள்ளம் விஞ்ஞானிகளின் கவனத்துக்கு வந்துள்ளது. பிறகு எடுக்கப்பட்ட மிகவும் தெளிவான படங்கள் மூலம் அதன் உருவாக்கம் உறுதி செய்யப்பட்டது.
இந்த தாக்கத்தை ஏற்படுத்திய விண்வெளிப் பொருள், கிட்டத்தட், 3 முதல் 6 மாடி கட்டிடம் அளவுக்கு இருந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அது நிலவில் மோதியபோது, மண் மற்றும் பாறைத்துகள்கள் 100 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளன. பள்ளத்தைச் சுற்றிலும் சுமார் 7 கிலோமீட்டர் பரப்பில் தாக்கத்தின் தடயங்களும் காணப்பட்டுள்ளன.
நிலவின் மேற்பரப்பு – வெப்ப நிலை
அதுமட்டுமல்ல.. அந்தப் பகுதியைச் சுற்றி வெப்பநிலை குறைந்த பகுதியும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாக்கத்தால் நிலவின் மேல்பரப்பில் ஏற்பட்ட மாற்றங்களே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்..
திடீரென ஏற்பட்டுள்ள இந்த புதிய பள்ளத்துக்கு ஒரு பெயரையும் விஞ்ஞானிகள் வைத்திருக்கிறார்கள்.. நிலவு தொடர்பான ஆய்வுகளில் பங்களித்த விஞ்ஞானி டாம் மெக்கெட்சின் நினைவாக McGetchin crater என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுபோன்ற பெரிய தாக்கம் சுமார் 132 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நிகழக்கூடிய அரிய சம்பவம் என்கிறார்கள். அதனால் இந்த கண்டுபிடிப்பு நிலவைப் பற்றிய ஆய்வுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
நாம் பூமியிலிருந்து நிலாவை பார்த்தால், அதன் மேற்பரப்பு அமைதியாக காணப்படுகிறது.. ஆனால், உண்மை அது கிடையாது.. விண்வெளியிலிருந்து வரும் பொருட்கள் தொடர்ந்து அதன் முகத்தை மாற்றிக்கொண்டே இருக்கின்றன… அதற்கான ஆய்வுகளும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.. எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவில் தங்குவதற்கான இடங்களை அமைக்கும்போது, இப்படிப்பட்ட தாக்கங்கள் ஏற்படுத்தக்கூடிய ஆபத்துகளை புரிந்துகொள்ளவும் இந்த ஆய்வு கண்டிப்பாக உதவக்கூடும்…!!

