நீங்கள் தேடும் இடத்தில் நான் இருக்க மாட்டேன்; மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்: முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி  – Kumudam

Spread the love

ஆளுநர் உரையின் மீதான பதிலுரையில் முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியை தழுவியதை “எங்க உங்க அப்பாவ காணோம்” என்று குட்டி கதை சொல்லி விமர்சித்தார். இதற்கு எதிர்க்கட்சியினர் மற்றும் தவெக கூட்டணியில் உள்ள கட்சிகளும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். திருவாரூரில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய அவர், “தமிழ்நாட்டில் ஏராளமான பிரச்னைகள் இருக்கிறது; மின்வெட்டு, விவசாயிகளுக்கு நீர் திறந்துவிட முடியவில்லை; இதை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசினார்; பதில் சொல்ல வேண்டிய முதலமைச்சர் என்ன சொன்னார்?

‘எங்க அப்பாவைக் காணோம்’ என கேட்கிறார்; அப்பாவை அங்கு தேடாதீர்கள்; அவர் மக்கள் மனதில் பதிந்திருக்கிறார்; அது போதும்.  நீங்கள் தேடும் இடத்தில் நான் இருக்க மாட்டேன்; மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்; சட்டமன்றத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் மனதில் இருக்கிறேன். கோட்டையில் என்னைப் பார்க்க வேண்டும் என்றால் அங்குள்ள கலைஞர் உரிமைத் தொகை உள்ளிட்ட மக்கள் நலத்திட்டக் கோப்புகளைப் பாருங்கள், இந்த ஸ்டாலின் இருப்பான்.

புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் போன்ற கோப்புகளில் ஸ்டாலின் இருப்பான்; கோட்டையில்தான் இருக்கிறேன்; ஆட்சியில்தான் இருக்கிறேன் மகளிர் உரிமை திட்டம் இருக்கும்வரை இந்த ஸ்டாலின்தான் முதலமைச்சர்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *