Tamilnadu
oi-Yogeshwaran Moorthi
திருவாரூர்: யாருடனும் கூட்டணி இல்லை, திமுக தனித்து போட்டியிடும் என்று ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்று திமுக எம்பி ஆ.ராசா கோரிக்கை வைத்துள்ளார். திமுக தோல்வி அடைந்த போதும் கூட மக்களிடையே மிகப்பெரிய எழுச்சி இருப்பதாக கூறிய ஆ.ராசா, ஸ்டாலினை ஒரு தேர்தலில் எடை போட்டுவிடுவீர்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில வாரங்களாகவே திமுக கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சியாக வெளியேறி வருகிறது. விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் தவெக பக்கம் சென்றுவிட்ட சூழலில், அடுத்ததாக மதிமுகவும் தவெகவை நோக்கி நகரத் தொடங்கி இருக்கிறது. இது திமுக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக வைகோ மற்றும் துரை வைகோ ஆகியோரின் பேச்சுகளுக்கு திமுகவினர் கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் நேரடியாக வைகோ மற்றும் மதிமுகவை அட்டாக் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூரில் திமுக நிர்வாகி மதிவாணனின் இல்லத் திருமண விழா நடைபெற்றது.
இதில் திமுக தலைவர் ஸ்டாலின், டிஆர் பாலு, கே.என்.நேரு, சிபிஐ மூத்த தலைவர் முத்தரசன், முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் திமுக எம்பி ஆ.ராசா பேசுகையில், காமராஜரை தோற்கடித்த சீனிவாசன், அண்ணாவிடம் வந்து பாராட்டு விழா இருக்கிறது. நீங்கள் வர வேண்டும் என்றார்.
அதற்கு அண்ணா, வின்ஸ்டன் சர்ச்சிலை தெரியுமா என்றார். 2ஆம் உலகப்போரில் பல்வேறு நாடுகளை காப்பாற்றிய பங்கு சர்ச்சிலுக்கு உண்டு. அந்த வின்ஸ்டன் சர்ச்சில் போருக்கு பின் நடந்த தேர்தலில் தோற்றுப் போனார். வென்று வந்த இங்கிலாந்து பிரதமரிடம் இதுகுறித்து கேட்ட போது, சர்ச்சில் ஒரு ஸ்டேட்ஸ்மேன்.. அவர் ஒரு உலகத் தலைவர். ஒரு தேர்தலில் மக்கள் அளித்துள்ள வெற்றியோ, தோல்வியோ சர்ச்சிலை பாதிக்காது.
ஒரு தேர்தலை வைத்து ஒரு தலைவரை எடை போடுவீர்களா என்று கேட்டார். இதன்பின் பெ.சீனிவாசன் ராஜாஜியிடம் சென்றார். அதற்கு ராஜாஜி, அவ்வளவு பெரிய மகாத்மா காந்தியை 2 இன்ச் புல்லட் தான் கொன்றது. அதற்காக அந்த தோட்டாவுக்கு பாராட்டு விழா நடத்தலாமா என்றாராம். அண்ணாவும், ராஜாஜியும் இருந்த சட்டசபையில் நாதாரித் தலைவர்கள் எல்லாம் முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளனர்.
எங்கள் தலைவரை ஒரு தேர்தலை வைத்து எடை போடுவீர்களா? முத்தரசன் என்னை மன்னிக்க வேண்டும். சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சொல்கிறார், திமுக கூட்டணியே இல்லையாம்.. திமுக கூட்டணியில் சிபிஎம் இல்லை என்று சொல்வதற்கு உரிமை இருக்கிறது. திமுக கூட்டணியே இல்லை என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் ஸ்டாலினை வந்து எவ்வளவு பேர் சந்திக்கிறார்கள் தெரியுமா.. மிகப்பெரிய எழுச்சி இருக்கிறது.. அதேபோல் இன்னொரு கட்சித் தலைவர் பொதுக்குழு கூட்டி சொல்கிறாராம்.. அந்த தலைவர் சென்றால் அப்படியே ஒரு லட்சம் பேர் நிற்பார்களாம். மொத்த கட்சியும் கலைஞர் கோட்டம் கொள்ளாது. தயவு செய்து, திமுக யாருடனும் கூட்டணியில் இல்லை.. திமுக தனித்து போட்டியிடும்.. இப்படி அறிவியுங்கள்.. 234 தொகுதிகளிலும் நாம் நிற்போம். யாரையும் நம்பியும் திமுக இல்லை என்று தெரிவித்துள்ளார்.