‘நெருக்கடியில் தோள்கொடுத்த நண்பர்’ – அமெரிக்க போரின்போது விமானங்களை பாகிஸ்தானிற்கு மாற்றியதா ஈரான்? | Iran Saved Its Aircraft by Relocating Them to Pakistan During the War

Spread the love

பிப்ரவரி மாதம் அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தன்னிச்சையான தாக்குதலைத் தொடுத்தது. இதில் முதல் நாள் தாக்குதலில் ஈரான் மத உச்சத் தலைவர் கமெனி மற்றும் முக்கிய தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர்.

அதன் பிறகும் ஒரு மாதத்திற்கும் மேல் இந்தப் போர் நடந்தது. இந்தப் போரின் போது அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் விமானப்படை தளங்கள் மீது சரமாறியாகத் தாக்குதல் நடத்தின. இதனால் ஈரானில் உள்ள அனைத்து போர்விமானங்களும், போர்க்கப்பல்களும் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.

ஆனால் போர் தொடங்கியவுடன் ஈரான் மிகவும் தந்திரமாகச் செயல்பட்டு தனது போர்விமானங்கள் அனைத்தையும் அண்டை நாடான பாகிஸ்தானிற்கு எடுத்துச்சென்று பாதுகாத்துள்ளது தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தான் அமெரிக்காவின் விசுவாசமுள்ள நண்பனாக இருந்தபோதிலும் இவ்விவகாரத்தில் ஈரானுக்கு உதவிக்கரம் நீட்டி இருப்பது அமெரிக்காவைக் கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் இருக்கும் நூர்கான் விமானப்படைத்தளத்திற்கு ஈரான் தனது விமானங்களைப் பத்திரமாக இடமாற்றம் செய்ததாக அமெரிக்கா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிருடன் அமெரிக்க ராணுவ அதிகாரிகள்

பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிருடன் அமெரிக்க ராணுவ அதிகாரிகள்

ஆனால் போர் தொடங்கி ஒரு மாதத்திற்குப் பிறகு டொனால்டு ட்ரம்ப் போர் நிறுத்தம் அறிவித்தபோதுதான் ஈரான் இது போன்ற வேலையைச் செய்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தாக்குதலில் மிஞ்சிய எஞ்சிய விமானங்களையாவது காப்பாற்றிக்கொள்வோம் என்ற எண்ணத்தில் அவற்றை பாகிஸ்தானுக்கு மாற்றியதாக அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் இந்தச் செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மத்தியஸ்தராக பாகிஸ்தான் செயல்படுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார்.

இது தவிர பயணிகள் விமானங்களை ஈரான் தனது மற்றொரு அண்டை நாடான ஆப்கானிஸ்தானிற்கு இடமாற்றம் செய்ததாகவும், அதில் விமானப்படை விமானங்கள் இருந்ததா என்று தெரியவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானும், போர் தொடங்குவதற்கு முன்பு ஒரு ஈரான் விமானம் ஆப்கானிஸ்தான் வந்ததாகவும், போர் தொடங்கியதால் அந்த விமானம் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருப்பதாகவும் தாலிபான் அரசு தெரிவித்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர்நிறுத்தம் இருந்தாலும், ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. அதோடு ஈரானுக்குள் எந்தக் கப்பலும் செல்ல முடியாத அளவுக்கு அமெரிக்கா முற்றுகை செய்துள்ளது. இதனால் ஈரான் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்து சேமிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *