Tamilnadu
oi-Vigneshkumar
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் கல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேச்சுவார்த்தையின் போது திடீரென கைகலப்பு ஏற்பட்ட நிலையில், கூட்டத்தில் இருந்த ஒருவர் கல்லை எடுத்து வீசியுள்ளார். அந்த கல் தலையில் பட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழந்துள்ளார்.
ஒரு நொடியில் கோபத்தில் நாம் எடுக்கும் முடிவு வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடும். அந்த ஒரு நொடியில் நாம் எல்லை தாண்டினால் பிறகு வாழ்நாள் முழுக்க அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டி இருக்கும். இதை உணர்த்தும் வகையிலான சம்பவம் ஒன்று இப்போது நடந்துள்ளது.

அதாவது திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. சுமார் 20 முதல் 25 நாட்கள் குடிநீர் வரவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த கண்ணநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் அங்கு சென்று பொதுமக்களிடம் பேசி அவர்களை சமாதானப்படுத்த முயன்றுள்ளார். 54 வயதான மகாராஜன் அங்கிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு தரப்பும் பேசியுள்ளனர். அப்போது சிறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மகாராஜன் சமாதானம் செய்ய முயன்ற நிலையில், அதை கூட்டத்தில் இருந்தவர்கள் கேட்கவில்லை. தண்ணீர் இல்லாமல் எப்படி என கேட்டு வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கூட்டத்தில் இருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மகாராஜனை நோக்கி கல்லை வீசியுள்ளார். அந்த செங்கல் மகாராஜன் தலையில் எதிர்பாராத விதமாக பட்டுள்ளது. செங்கல் அதிவேகமாக வந்து விழுந்த நிலையில், படுகாயமடைந்து மகாராஜன் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார்.
எதிர்பாராத விதமாக செங்கல் தாக்கியதால் தலையில் படுகாயமடைந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு, மகாராஜனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த வள்ளியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மகாராஜன் உடலை கைப்பற்றிய போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். மகாராஜனை தாக்கிய நபரை அடையாளம் கண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்திய நபர் இப்போது தலைமறைவாக இருப்பதாகவும், அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.