‘நம்ம முதல்வர், இளைய தளபதியா இருந்ததிலிருந்து அவரை தோளில் தூக்கிக்கிட்டு ஓடிக்கிட்டிருக்கோம். ஆனா, மாற்றுக் கட்சியிலேர்ந்து நேத்து வந்தவங்க இங்கே பதவி வாங்குறாங்க, பணம் சம்பாதிக்குறாங்க, எங்களை அசிங்கப்படுத்துறாங்க. நாங்க கட்சியில இருக்கட்டுமா இல்ல கௌம்பட்டுமா?’ த.வெ.க. நிர்வாகிகளின் இந்த அனல் கேள்வியால் ஆடிப்போயுள்ளது, அக்கட்சியின் தலைமை!
விஜய் முதல்வரானதும் அதி.மு.க.வின் பெரும்பாலான நிர்வாகிகள் த.வெ.கவில் இணைந்துவிட்ட நிலையில், தி.மு.க. முகங்களும் மெதுவாக விஜய்யை நோக்கி நகரத் துவங்கியுள்ளன. இது தவெ.க.வின் அந்தஸ்துக்கு மிகப்பெரிய அங்கீகாரம்தான் என்றாலும் உட்கட்சிக்குள் இதனால் பலவித சிக்கல்கள் உருவாகத் துவங்கியுள்ளன. அதாவது, சமீபத்தில் த.வெ.கவுக்குத் தாவிய அரசியல் பெரும்புள்ளிகள், விஜய்யின் ரசிகர்களாக இருந்து அரசியல் ஸ்வாதிகளாக மாறியிருக்கும் தங்களை அலட்சியப் படுத்துவதுடன், ஓரங்கட்டி அவமதிக்கின்றனர் என அக்கட்சி நிர்வாகிகள் கொதிக்கின்றனர்.
குறிப்பாக, கோவை மாவட்ட த.வெ.க.வில் வெடித்திருக்கும் இந்த பிரச்னைதான் தலைமைக்கு மனப் புழுக்கத்தை உருவாக்கியுள்ளதாம். இதுபற்றி ஆதங்கத்துடன் நம்மிடம் விளக்கிய தவெ.க. நிர்வாகிகள் சிலர், கோவை, புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரான பாபு, ஏழ்மையான ஆட்டோ டிரைவர். துவக்கத்திலிருந்தே தளபதியின் ரசிகராக, மன்ற நிர்வாகியாக, மக்கள் இயக்க நிர்வாகியாக இருந்தவர். ஒரு மாவட்டச் செயலாளராக தன் லெவலுக்கு என்ன செலவு செய்ய முடியுமோ அதை செய்து, கட்சியை குறையில்லாமல்தான் கொண்டுபோகிறார்.
இந்த நிலையில், தேர்தலுக்கு சில காலம் முன்பு த.வெ.க.வில் வந்து சேர்ந்தார் சுகுமார். அடிப்படையில் தி.மு.க. புள்ளியான இவர், த.வெ.க. தலைமையில் யாரைப் பிடித்தோரோ தெரியவில்லை, சூலூர் தொகுதியில் சீட் வாங்கினார். தளபதி முகத்தால் எம்.எல்.ஏ.வும் ஆகிவிட்டார். இந்த சுகுமார் துவக்கத்தில் இருந்தே மா.செ. பாபுவை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ‘ஆட்டோக்காரன்தானே!’ என நினைக்கிறாரா பார்க்கிறாரா தெரியவில்லை.
வயில் இல்லை பண விஷயத்தில் அந்தஸ்து கட்சியில் சேர்ந்தபோதும் சரி, தேர்தல் சமயத்திலும் சரி, எம்.எல்.ஏ. ஆன பிறகும் சரி ஒரு மாவட்டச் செயலாளரோடு கலந்தாலோசிக்க வேண்டிய எதையும் அவர் கலந்தாலோசிப்பதில்லை. சூலூர் தொகுதியில் நடக்கும் கட்சி நிகழ்வுகளின் பேனர்கள், விளம்பரங்கள், சோஷியல் மீடியா கார்டுகளில் மா.செ. பாபுவின் போட்டோவோ, பெயரோ எதுவும் இடம்பெறாது. ஆனால் பொறுப்பு அமைச்சர் சம்பத்தின் போட்டோ, இம்மாவட்டத்துக்கு சம்பந்தமே இல்லாத அமைச்சர் அருண்ராஜின் போட்டோ தவறாமல் போடப்படுகிறது. பாபுவே தானாகப் போய், சுகுமாரிடம் இணக்கம் காட்டினாலுமேகூட அவர் இறங்கி வரமறுக்கிறார்.
குறிப்பாக அதிமுகவிலிருந்து தவெகவுக்கு வந்திருக்கும் கந்தவேல் போன்றவர்களை தன்னுடன் ஒரு அணியாக சுகுமார் வைத்துக்கொண்டு பாபுவை ரொம்பவும் அலட்சியப்படுத்துகிறார். சுகுமாரைப் பின்பற்றி, அந்த தொகுதி த.வெ.க.வினர் நடத்தும் எந்த நிகழ்விலும் பாபுவுக்கு மரியாதை கிடையாது. எங்களைப்போன்ற அடிமட்ட நிர்வாகிகளுக்கும் இதே நிலைதான்.
இதனால், இந்த மாவட்ட த.வெ.கவில் ஒற்றுமை சீர்கெட்டு, கட்சி ஆட்டம் காணத் துவங்கியிருக்கிறது. இதை தி.மு.க வகையாகப் பயன்படுத்துகிறது. விளைவு, உள்ளாட்சித் தேர்தலில் விசிலுக்கு அடி உறுதி என இப்போதே தோன்றுகிறது. புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தலைமையின் கவனத்துக்கு இந்த அவமரியாதைகளைக் கொண்டுபோய் இருக்கிறோம். இதேநிலை நீடித்தால் கூடிய சீக்கிரம் த.வெ.க.வை விட்டு உறுதியாக வெளியேறிடுவோம் என்று கொதித்தனர்.
கோவையில் மட்டுமல்ல, அ.தி.மு.க மாஜி அமைச்சர்களான உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.வி.ராமலிங்கம் ஆகியோர் விஜய் கரங்களில் தஞ்சமடைந்துவிட்ட நிலையில், அவரவர் சொந்த மாவட்டங்களில் அவர்களின் அதிரடி செயல் பாடுகளால் அங்கே த.வெ.க. நிர்வாகிகளும், கடும் அமைச்சர்களும் ஆதங்கத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுபற்றி அம்மாவட்டங்களைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, மூன்றாம் இடத்துக்குப்போன அதி.மு.கவிலிருந்து பதவி வெறியிலும், சொத்துக்களைப் பாதுகாக்கும் நோக்கிலும் எங்கள் கட்சிக்குத் தாவியவர்கள், வந்தவுடனேயே வேலையை காட்டத் துவங்கிவிட்டார்கள். பல வருட அரசியல் அனுபவம் உள்ளதால் மீடியாவையும், மேடையையும் எளிதில் ஆக்ரமித்துக்கொள்கிறார்கள்.
கரூருக்கு முதல்வர் விசிட் செய்யும் இடங்களைப் பார்வையிடச் சென்றபோது கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகனை தாண்டி எம்.ஆர்.விஜயபாஸ்கர் சீன் போட்டார். வீடியோவைப் பார்த்தாலே தெரியும் மதியழகனின் முகம் தொங்கிப்போயிருக்கும். அதேபோல் திருச்செந்தூருக்கு புஸ்ஸி சென்றபோது, கடற்கரை முதல் கோவில் வரை கடம்பூர் ராஜூ நின்றுகொண்டு எங்கள் நிர்வாகிகளைப் பின்னுக்குத் தள்ளினார். இதேபோல் புதுக்கோட்டை விஜயபாஸ்கரோ அமைச்சர் பர்வேஸைத் தாண்டி அம்மாவட்டத்தில் அரசியல் பண்ணத் துவங்கிவிட்டார். தன்னோடு தாவியிருக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகளை அமைச்சருக்கு அறிமுகம் செய்த நிகழ்விலேயே அவர் பண்ணிய வேலைகள் பர்வேஸை கடுப்பாக்கி விட்டன. இவை, கட்சிக்குள் கடும் குழப்பத்தை உருவாக்கி, ஒவ்வொரு மாவட்டத்திலும் தவெகவை இரு அணிகளாக மாற்றி வருகின்றன. தலைமை இதை விரைந்து சரி செய்ய வேண்டும் என்றனர்.
இதுபற்றி, த.வெ.க. கோவை புறநகர் கிழக்கு மா.செ. பாபுவிடம் கேட்டபோது சுகுமார் என்னை துவக்கத்தில் இருந்தே கண்டுகொள்வதில்லை. ஒரு மாவட்டச் செயலாளராக எனக்கு தரவேண்டிய அங்கீகாரத்தையும் தருவதில்லை. நான் ஆட்டோக்காரன்தான். ஆனால் தளபதியின் வெறி ரசிகன். தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றிய தளபதி கூடிய சீக்கிரம் என் வேதனையையும் தீர்ப்பார் என நம்புகிறேன் என்றார்.
சூலூர் எம்.எல்.ஏ. சுகுமாரோ, அந்தப் பையன் (மா.செ. பாபு) செயல்பாடு சரியில்லைங்க. கட்சி வேலை எதையும் உருப்படியா பண்றதில்லை. புஸ்ஸியாரே வார்ன் பண்ணியும், ஒரு மாற்றமும் அவர்கிட்ட இல்லை. வெறுமனே போட்டோஷூட் பண்றதே அரசியல்ன்னு நினைக்கிறார். நான் அவரை ஒதுக்கலை. சூலூர் தொகுதி ஒதுக்கிட்டாங்க என்றார். நிர்வாகிகளே உட்கட்சி பூசல், உள்ளதுக்கே உலை வைத்துவிடுமே!

