நேபாளம்: சடலங்கள் கிடைக்காததால் பொம்மைகளை வைத்து இறுதிச்சடங்கு – நெஞ்சை உலுக்கும் சோகம்

Spread the love

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தால் பல கிராமங்கள் தடம் தெரியாமல் அழிந்துபோயிருக்கின்றன. பயங்கர அதிர்வுடன் பெருக்கெடுத்து வந்த சேறும் சகதியுமான வெள்ளப்பெருக்கில் சிக்கி, இதுவரை 1100-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

தொடர்ந்து மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை அவசரக்கால மீட்புக் குழுவினர் 1,114 உடல்கள் மீட்டிருக்கின்றனர். சீனாவில் 16 பேர் பலியாகியுள்ளனர்.

நேபாள் சோகம்
நேபாள் சோகம்

இதன் மூலம் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 1,130 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போனோர் எண்ணிக்கை 4,462 ஆக உள்ளது. காணாமல் போனவர்களில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 800-க்கும் அதிகமான வெளிநாட்டினரும் அடங்குவர்.

வெள்ளம் ஏற்பட்டு ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையில், வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களின் உடல்கள் கிடைக்காததால், உறவினர்கள் கதறி அழுதபடி இறுதிச்சடங்குகளைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.

உருவப் பொம்மைகளை எரித்து இறுதிச்சடங்குகள் செய்யும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன தன் கணவருக்கு இறுதிச்சடங்கு செய்த டோல்மா நெவார் தமாங் என்ற பெண், “அவர் சீனா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த அசம்பாவிதம் நடந்தது. செய்தி பார்த்துவிட்டுத் தொடர்ந்து தொலைபேசியில் அழைத்தும் அவர் எடுக்கவில்லை.

அவரது ஆன்மா சாந்தியடையவும், எங்கு இருந்தாலும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றே ஆசிக்கிறேன். வேறு வழியின்றி இந்தத் தர்பை புல் உருவப் பொம்மை எரிப்புச் சடங்கைச் செய்கிறேன்” என்றார்.

நேபாள் சோகம்
நேபாள் சோகம்

பேரழிவு நடந்து ஒரு வாரம் கடந்த நிலையிலும், நீர்மின் நிலையங்களின் பல சுரங்கப் பாதைகளை மூடியுள்ள அடர்ந்த சேற்றைத் தோண்டியும், துளையிட்டும், வெடிவைத்தும் நேபாள மீட்புக் குழுவினர் தேடுதல் பணியைத் தொடர்ந்து வருகின்றனர். இதுவரை சுரங்கப் பாதைகளிலிருந்து உடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ள போதிலும், ஏதேனும் அற்புதங்கள் நிகழலாம் என்ற சிறிய நம்பிக்கையுடன் தேடுதல் தொடர்வதாக நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கனால் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்களால் சவக்கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான உடல்களின் டி.என்.ஏ (DNA) மாதிரிகளைச் சேகரித்த பிறகு நேபாள அதிகாரிகள் அவற்றை அடக்கம் செய்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *