“நேபாளம் வரை போன பதில்கள்..” நீட் போராட்டம் முடிஞ்சு ஒரு மாசம் கூட ஆகல.. வெடித்த மற்றொரு போராட்டம் | Jharkhand Exam Paper Leak protest: 120 Questions Leaked, Answers Sent to Nepal CID Probe Reveals

Spread the love

India

oi-Vigneshkumar

ராஞ்சி: நீட் வினாத்தாள் லீக் விவகாரம் தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டம் நாடு முழுக்க எதிரொலித்தது. அந்த போராட்டம் ஓய்ந்து சிவ வாரங்கள் கூட ஆகாத நிலையில், ஜார்க்கண்டில் அரசு வேலைக்கான போட்டி தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க கோரி போராட்டம் வெடித்தது. இதற்கிடையே 2024ல் நடைபெற்ற போட்டி தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சிஐடி விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜூன் மாதம் மத்திய அரசுக்கு எதிராக நீட் விவகாரத்தில் மிக பெரிய மாணவர் போராட்டம் நடைபெற்றது. கரப்பான் பூச்சி கட்சி ஆரம்பித்த இந்த போராட்டத்திற்கு நாடு முழுக்க ஆதரவு கிடைத்தது. இதனால் வேறு வழியில்லாமல் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Jharkhand neet protest

மீண்டும் வெடித்த போராட்டம்

இந்த போராட்டம் முடிந்து சில வாரங்கள் கூட ஆகாத நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிக பெரிய மாணவர் போராட்டம் வெடித்துள்ளது. அங்கு அரசு வேலைகளுக்காக நடக்கும் போட்டி தேர்வுகளில் முறைகேடு நடப்பதாக சொல்லி இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு கடந்த 2024 செப்டம்பர் 21 மற்றும் 22ம் தேதிகளில் நடைபெற்றது. இதற்கு முன்பு நடைபெற்ற தேர்வு வினாத்தாள் லீக் குற்றச்சாட்டுகளால் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. மீண்டும் வினாத்தாள் லீக் ஆகக்கூடும் என்ற அச்சம் காரணமாக தேர்வு நடைபெற்ற நாட்களில் ஜார்க்கண்ட் முழுவதும் இணையதள சேவைகள் கூட முடக்கப்பட்டன. ஆனால், இணையதள சேவை முடக்கப்பட்ட நிலையிலும் முறைகேடு நடந்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டினர்.

நேபாளம் வரை

இதற்கிடையே சிஐடி விசாரணை தொடர்பான ஆவணங்கள் இப்போது வெளியாகியுள்ளன. அதில் இந்த தேர்வின் வினாத்தாள் மற்றும் அதற்கான பதில்கள் வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. வினாத்தாளுக்காக பணம் செலுத்தியவர்களுக்கு ஹசாரிபாக், ஜாம்ஷெட்பூர், பாட்னா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பதில்கள் வழங்கப்பட்டதாகவும், நேபாளம் வரையிலும் அவை சென்றதாகவும் சிஐடி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இணையதளம் முடக்கப்பட்டிருந்ததால்.. லேண்ட்லைன் மூலம் வினாத்தாள்களும் பதில்களும் பரப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மூடி மறைத்த ஜார்க்கண்ட் அரசு?

இந்த விவகாரத்தில் கடந்த 2025 மார்ச் மாதம் சிஐடி தனது விசாரணையை முடித்ததாக கூறப்படுகிறது. மொத்தமுள்ள 150 கேள்விகளில் 120 கேள்விகள் முன்கூட்டியே லீக் ஆனதை சிஐடி கண்டறிந்துள்ளன. மேலும், தேர்வுக்கு முன்பே பதில்கள் பகிரப்பட்டதற்கான ஆதாரங்களும் விசாரணையில் கிடைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, தேர்வுக்கு முன்பாக காலை 7.23 மணிக்கு எடுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு போட்டோ முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது.

ஆனால் சிஐடி தனது அறிக்கையை சமர்ப்பித்த பிறகு, ஜார்க்கண்ட் அரசு அந்த அறிக்கையை கிடப்பில் போட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வினாத்தாள் லீக் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க இரண்டாவது சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த இரண்டாவது விசாரணையில், JSSC தேர்வில் வினாத்தாள் லீக் ஆகவில்லை என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதன் மூலம் புகார்கள் முடித்து வைக்கப்பட்டது. இதுவே இளைஞர்களை கொந்தளிக்க வைத்தது. இதன் காரணமாகவே நீட் போராட்டத்தை தொடர்ந்து ஜார்க்கண்டில் இளைஞர்களை போராட்டத்தில் குதித்தனர்.

தீவிரமடையும் போராட்டம்

இதற்கிடையே ஜார்க்கண்ட் பொதுப் பணியாளர் தேர்வாணையமான JPSC நடத்திய மற்றொரு தேர்விலும் வினாத்தாள் லீக் ஆனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் தலைவர் தேவேந்திரநாத் மஹ்தோ தலைமையில் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் நடைபெற்று வரும் போராட்டம் தற்போது 16வது நாளை எட்டியுள்ளது.

மாணவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்றும் அவர்களின் பரிந்துரைகளை அரசு கவனத்தில் கொண்டுள்ளதாகவும் ஜார்க்கண்ட் அமைச்சர் தீபிகா சிங் தெரிவித்துள்ளார். மாணவர் பிரதிநிதிகளுக்கும் அரசுக்கும் இடையே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இருப்பினும், இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *