Tamilnadu
oi-Vishnupriya R
திருச்செந்தூர்: திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் உடல் நலக்குறைவு காரணமாக திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னையில் முகாமிட்டிருந்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை, ஞாயிறுக்கிழமை சட்டசபை கூட்டத் தொடர் நடக்காது என்பதால் அனைத்து சட்டசபை உறுப்பினர்களும் தங்களது சொந்த தொகுதிக்கு வருகை தந்துள்ளனர்.
அந்த வகையில் திருச்செந்தூர் திமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று மதியம் 1.30 மணி அளவில் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்தார்.
அங்கிருந்து தூத்துக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்து பின் அவர் மாலையில் திருச்செந்தூர் அருகே உள்ள சேர்ந்த பூமங்கலம் பகுதியில் நடைபெறும் முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தது.
ஆனால் விமான நிலையத்திலிருந்து இறங்கும்போதே அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வருகை தந்தார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாகவும், இரவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காலை மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு அதன் பிறகு செல்லலாம் என்று அறிவுரை வழங்கினர்.
இதையடுத்து அவர் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் சட்டசபை உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.