நோ எண்ட்ரி! தடுத்து நிறுத்தப்பட்ட சரக்கு லாரிகள்! முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட மணிப்பூர்.. பதற்றம்! | Hundreds of trucks stranded in Manipur as UNC blockade enters fourth day

Spread the love

India

oi-Halley Karthik

இம்பால்: வெளி மாநிலங்களிலிருந்து பெட்ரோல், டீசல், உணவு பொருட்களை ஏற்றி வரும் லாரிகளை மணிப்பூருக்குள் நுழைய விடாமல் போராட்டக்காரர்கள் தடுத்திருப்பதால், அம்மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சரக்குகளை ஏற்றி வந்த லாரி ஓட்டுநர்கள் 10 நாட்களாக நடு ரோட்டில் காத்து கிடக்கின்றனர். இதனால் மணிப்பூரில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த லாரிகள் மற்றும் எரிபொருள் டேங்கர்கள், இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு மணிப்பூர் தலைநகர் இம்பாலை நோக்கி செல்பவை. மணிப்பூரின் எல்லையான ஜிரிபாமில் இருந்து இம்பாலுக்குள் நுழையும் தேசிய நெடுஞ்சாலை 37ல் உள்ள நியூ கீதெல்மன்பி என்ற இடத்தில் இவை தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன.

Manipur

நோக்கம் என்ன?

யுனைடெட் நாகா கவுன்சில்தான்(UNC) மணிப்பூரில் இப்படி லாரிகளை உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறது. கடந்த மே 13 அன்று காங்போக்பி மாவட்டத்தில் உள்ள லெய்லோன் பைபே என்கிற கிராமத்திலிருந்து லியாங்மை நாகா சமூகத்தை சேர்ந்த 6 பேர் குக்கி ஆயுத குழுக்களால் கடத்தப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் UNC வலியுறுத்துகிறது.

மட்டுமல்லாது குக்கி ஆயுத குழுக்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றம் சாட்டி, மணிப்பூர் மாநில துணை முதலமைச்சர் நெம்சா கிப்ஜென் என்பவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் நாகா அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. இதுபோக.. மியான்மர் எல்லையில் மத்திய அரசு மேற்கொள்ளும் வேலி அமைக்கும் பணி மற்றும் சுதந்திர நடமாட்ட உரிமை ரத்து ஆகிய முடிவுகளுக்கும் நாகா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தற்போது ஊருக்குள் லாரிகளை நுழைய விடாமல் தடுத்து நிறுத்துவதன் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கடியை கொடுத்து தங்கள் கோரிக்கைகளை அரசுகள் பரிசீலிக்க வைக்க இந்த அமைப்பு முயற்சிக்கிறது.

ஆனால், அரசிடம் கோரிக்கைகளை எடுத்துச் செல்ல எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. லாரிகளை தடுத்து நிறுத்துவதுதான் இதற்கான வழியா? என்று ஓட்டுநர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

இது குறித்து அவர்கள் பேசுகையில், “நான் பீகாரை சேர்ந்த ஓட்டுநர். சரக்கை ஏற்றி மணிப்பூருக்கு போக வேண்டும். வண்டியில் சரக்கு இருக்கிறது. ஆனால், மணிப்பூருக்குள் நுழைய முடியவில்லை. 10 நாட்களாக நான் ரோட்டில்தான் இருக்கிறேன். இங்கு உணவு, பாதுகாப்பான தங்குமிடம் எதுவும் கிடைக்கவில்லை. போதாத குறைக்கு வழி முழுவதும் வசூல் கும்பல்கள் இருக்கின்றன. ரோடு குண்டும் குழியுமா உயிரை வாங்குகிறது. இவ்வளவு துயரத்திற்கு நடுவில்தான் நாங்கள் வண்டியை ஓட்டுகிறோம். எனவே அரசு இந்த பிரச்சனையில் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *