பொதுவாக, நல்ல லாபம் பார்க்கும் வழிகள் என்ன, எந்த முதலீட்டில் என்ன ரிஸ்க் இருக்கிறது, அந்த ரிஸ்க்கைத் தாண்டி என்ன லாபம் கிடைக்கும், எதில் எந்த அளவுக்கு முதலீடு செய்யலாம் போன்ற சில அடிப்படைக் கேள்விகளின்படி யோசித்தால், நல்ல முதலீட்டுத் திட்டத்தை நம்மால் தேர்வு செய்ய முடியும்.
ஆனால், முதலீடு என்று வரும்போது நம்மில் பலருக்கும் சரியான முடிவை எடுக்கத் தெரிவதில்லை. பிறர் சொல்லும் முதலீடுத் திட்டத்தை மிகச் சிறப்பானது என்று நம்பி பணத்தைப் போடுபவர்கள் பலர். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களாக இருந்தாலும் சரி, இந்தியாவில் வசிக்கும் முதலீட்டாளராக இருந்தாலும் சரி, இதுதான் நடக்கிறது.
உதாரணமாக, பங்குச் சந்தையில் நேரடியாகப் பங்குகளை வாங்குவதில் அதிக லாபம் கிடைக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். உண்மைதான். ஆனால், தவறான பங்குகளை வாங்கினால், அதிக நஷ்டம் வரும். அந்த நஷ்டத்தைச் சரிசெய்வதற்கே பல ஆண்டுகள் நாம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
இன்னும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் “டைரக்ட்’ முறையில் தங்களுக்குப் பொருத்தம் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்துவிட்டு, குறைவான வருமானத்தையே பெறுகிறார்கள்.
யூலிப் பாலிசிகள் மூலம் மிகப் பெரிய லாபத்தை அடையலாம் என்று சிலர் சொன்னதை நம்பி, யூலிப் பாலிசி எடுத்துவிட்டு, 8% – 10% வருமானம் மட்டுமே பெற்றவர்கள் பலர். அந்தப் பாலிசியை எப்படி ஒழித்துக் கட்டுவது என்று தெரியாமல், பலரும் தவியாய்த் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இன்னும் சிலர், நமக்கு வம்பே வேண்டாம் என்று நினைத்து, இருக்கிற பணம் அத்தனையையும் வங்கி பிக்சட் டெபாசிட்டில் போட்டு வைத்திருக்கிறார்கள். வங்கி பிக்சட் டெபாசிட்டில் நம் பணம் பத்திரமாக இருக்கும். ஆனால், பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் அதில் கிடைக்கவே கிடைக்காது.