ஐபிஎல் 2026 தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு நடப்பு சாம்பியனான ஆர்.சி.பி, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றிருக்கின்றன. ப்ளே ஆஃப் சுற்றை அலங்கரித்த இந்த நான்கு அணிகள் குறித்து பார்ப்போம்.
நடப்பு சாம்பியன்களின் கம்பீரமான ஆதிக்கம்! (RCB)
கடந்த ஆண்டு தங்களது முதல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணி, இந்த ஆண்டும் அதே சாம்பியன் உத்வேகத்துடன் களம் கண்டு புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
கேப்டன் ரஜத் படிதார் தலைமையிலான இந்த அணி, 14 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் +0.783 என்ற சிறந்த ரன் ரேட் அடிப்படையில் நேரடியாக குவாலிஃபையர் 1 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
பேட்டிங்கில் “ரன் மெஷின்’ விராட் கோலி தூணாக நின்று அணியைத் தாங்க, பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப் பந்தயத்தில் முதலிடத்தில் உள்ளார்.
வெங்கடேஷ் ஐயர், தேவ்தத் படிக்கல் போன்ற வீரர்களின் பங்களிப்பும் அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் ஹைதராபாத்திடம் தோற்றிருந்தாலும், ஒட்டுமொத்தமாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சமபலத்துடன் திகழும் ஆர்சிபி, தங்களது சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் தீவிரமாக உள்ளது.