பசங்க : சின்னஞ்சிறு உலகம்! | ஆதி தாமிரா | `சினி’ஸ்கோப் 20 | a-special-series-on-pasanga-episode-20

Spread the love

நமது சினிமாக்களில் வரும் குழந்தைகள் பெரும்பாலும் கதைக்கு அவசியமான வசனங்களை, அதிகப்பிரசங்கித்தனமாக பேசுவதைத்தான் பார்த்திருக்கிறோம். அப்படியொரு நிலையில், 6-ம் வகுப்பு படிக்கும் சில மாணவர்களின் அசலான உலகத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த ‘பசங்க’, வெளியானபோது தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது. தமிழில் சிறார்களுக்கான சினிமா என்பது மிக அரிதான ஒன்று.

’பசங்க’ அப்படியான ஒரு படமாக அமைந்தது.

ஒரு சிறுகதை என்பது பெரும்பாலும் ஒரு நிகழ்வு, ஒரு சிந்தனை, ஒரு சிக்கல் போன்றவற்றை மையமாகக் கொண்டிருக்கும். ஒரு நாவல் என்பது ஒரு கதாபாத்திரத்தின் வாழ்க்கைப் பதிவு அல்லது ஒரு சிந்தனையின் விரிவான அலசலாக அமையலாம். ஆனால், ஒரு சினிமா பெரும்பாலும் உள்ளடக்கத்தில் ஒரு சிறுகதையைப் போலவும், வடிவத்தில் ஒரு நாவலைப் போலவும் அமையக்கூடியது.

எப்போதாவது சினிமாக்கள் நிகழ்வுகளை முன்னிறுத்தாமல், ஒரு நாவலைப் போல வாழ்க்கையைப் பதிவு செய்வதுமுண்டு. ‘பசங்க’ அப்படியான ஒரு பதிவுதான். மேலோட்டமாகப் பார்த்தால் இந்தப் படத்தின் கதை அன்பு மற்றும் ஜீவா எனும் இரண்டு சிறுவர்களுக்கு இடையிலான மோதலாகத் தெரிந்தாலும், அவையெதுவுமே நம்மைப் பதைபதைக்க வைப்பவையல்ல. இந்தப் படத்தில் வரும் பெரியவர்களைப் போலவே, நாமும் அவற்றைக் குழந்தைகளின் விளையாட்டு என்ற அளவிலேயே உள்வாங்கிக் கொள்கிறோம்.

’தி பாஸ் பேபி’ படத்தில், பாஸ் பேபியைக் காட்டிக்கொடுக்கும் ஆடியோ கேஸட் ஒன்றை, ’டிம்’ அவனது பெற்றோரிடம் ஒப்படைக்க முயற்சி செய்யும் காட்சி ஒன்று வரும். வீட்டுக்குள் பெற்றோர் இருப்பார்கள். வெளியே முற்றத்தில் டிம்முக்கும், பாஸ் பேபி குழுவுக்கும் இடையே மிகப் பரபரப்பான அடிதடி சேஸிங் காட்சி ஒன்று நடந்துகொண்டிருக்கும். வெளியே பொறி பறந்துகொண்டிருக்கும் அதே காட்சி, வீட்டுக்குள்ளிருக்கும் அவர்களது பெற்றோரின் பார்வையிலிருந்தும் ஒரு ஷாட்டில் காட்டப்படும். அப்போதுதான் நிஜமாகவே அங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது, ஆனால் நாம் அதை எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பது நமக்குப் புரியும். கதாசிரியரும், இயக்குநரும் நம் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் அந்த லானில் நிறுத்துகிறார்கள். அது ஒரு ரசனையான பார்வைக் கோணம். நாம் அவர்களோடு சேர்ந்துகொண்டு நடப்பதைப் பார்க்கப்போகிறோமா, அல்லது அந்தப் பெற்றோர்களோடு போய் நின்றுகொண்டு நடப்பதைப் பார்க்கப்போகிறோமா என்பது நமது தேர்வு.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *