AI தொழிற்நுட்பம் எந்தளவு வசதிகளைக் கொடுக்கிறதோ அதே அளவு இடைஞ்சல்களையும், மன உளைச்சலையும் கொடுக்கிறது. சமீபகாலமாக Deepfake தொழிற்நுட்பம் மூலம் நடிகளைகள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு நடிகை ராஷ்மிகா மந்தனாவின் Deepfake வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி விவாதமானது. அதைத் தொடர்ந்து, முன்னணி திரைப் பிரபலங்களான ஆலியா பட், தீபிகா படுகோன், கத்ரீனா கைஃப், பாலிவுட் நடிகர்கள் ஆமிர் கான், ரன்வீர் சிங் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலர் இந்த டீப்ஃபேக் போலி வீடியோக்களால் பாதிக்கப்பட்டனர்.
அந்த வரிசையில் தற்போது `அர்ஜுன் ரெட்டி” படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை ஷாலினி பாண்டே சிரமத்தை எதிர்க்கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தன் சமூக ஊடகப் பக்கத்தில், “என் உருவத்தைப் பயன்படுத்தி இணையத்தில் பரப்பப்படும் வீடியோ முற்றிலும் போலி. அது ஏஐ தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஒன்று. அதில் இருப்பது நான் அல்ல. இதுபோன்ற தொழில்நுட்பங்களைத் தவறாகப் பயன்படுத்தி, குறிப்பாக பெண்களைக் குறிவைத்து சீரழிப்பது மிகவும் வேதனையளிக்கிறது” என்று கவலையுடன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகை மிருணாள் தாக்கூர் தனது டீப்ஃபேக் வீடியோ குறித்து காட்டமாக எச்சரிக்கை விடுத்திருந்தார். “அனுமதியின்றி ஒருவரின் அடையாளத்தைத் திருடுவது சட்டப்படி குற்றம். உடனடியாக இதை நிறுத்த வேண்டும், மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் முறைப்படி நோட்டீஸ் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.