பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்.. அரண்டு போன ஓனர்.. என்ன நடந்தது! | Puncture mechanic GST notice: Man Receives Rs 100 Crore GST Notice After Identity Theft Scam

Spread the love

India

oi-Vigneshkumar

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் சாதாரண பஞ்சர் கடை நடத்தும் ஒரு நபருக்கு சுமார் ரூ. 100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் வந்துள்ளது. இதைப் பார்த்தவுடன் அவருக்கு ஒரு நிமிடம் தலையே சுத்திவிட்டது. இருப்பினும், அதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு மெகா மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த ராஜ் பிரஜாபதி ஒரு சாதாரண மெக்கானிக். சாலையோரம் பஞ்சர் கடை வைத்து, அன்றாடப் பிழைப்பிற்காகக் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார். இவருடைய வாழ்க்கை எப்போதும் போலத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், ஒரு நாள் தபாலில் வந்த ஒரு கடிதம் அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தலைகீழாக மாற்றியது.

Puncture mechanic GST notice GST India

ரூ.100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்

ஜிஎஸ்டி துறையிடமிருந்து வந்த அந்த நோட்டீஸைத் திறந்து பார்த்த பிரஜாபதிக்குத் தூக்கி வாரிப்போட்டது. அதில் அவர் ஒரு பெரிய நிறுவனத்தின் உரிமையாளர் என்றும், அந்த நிறுவனம் சுமார் 100 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் அந்த வர்த்தகத்திற்காகச் செலுத்த வேண்டிய 28 கோடி ரூபாய் வரியைச் செலுத்தவில்லை என்றும் அந்த நோட்டீஸ் எச்சரித்தது.

தினக்கூலிக்கே கஷ்டப்படும் அவருக்கு, இந்த கடிதத்தைப் பார்த்தவுடன் தலை சுற்றிவிட்டது. அவருக்கு இதில் இருக்கும் கணக்கே புரியாத ஒன்றாக இருந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், தான் ஒரு மிகப் பெரிய அடையாளத் திருட்டு மோசடியில் சிக்கியிருப்பதை அவர் உணர்ந்தார். இந்தச் சிக்கல் எப்படித் தொடங்கியது என்று ஆராய்ந்தபோது, 2024ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

என்ன நடந்தது

அப்போது தனது சகோதரியின் திருமணத்திற்காக ராஜ் பிரஜாபதிக்கு சிறு தொகை கடனாகத் தேவைப்பட்டது. அந்தச் சமயத்தில் அவருக்குத் தெரிந்த ஒரு நபர், கடன் வாங்கித் தருவதாகக் கூறி உதவிக்கு வந்துள்ளார். ஆனால் அதற்குப் பதிலாகப் பிரஜாபதியின் ஆதார் அட்டை, பான் கார்டு, சில வீடியோ மற்றும் கையெழுத்துகளை அவர் கேட்டுள்ளார். பணத் தேவையில் இருந்த பிரஜாபதியும், அந்த நபரை முழுமையாக நம்பித் தனது ஆவணங்கள் அனைத்தையும் ஒப்படைத்துள்ளார்.

ஆனால், அந்த நபர் பிரஜாபதிக்கு தெரியாமலேயே, அவரது ஆவணங்களைப் பயன்படுத்தி ஒரு போலி நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். மேலும், அவரது பெயரிலேயே ஒரு தனியார் வங்கிக் கணக்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவரது பஞ்சர் கடைக்கும் இந்த நிறுவனத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், ஆவணங்களை மட்டும் வைத்து பார்த்தால் பிரஜாபதி ஒரு மிகப் பெரிய தொழிலதிபர் ஆவார். இந்த மோசடி சுமார் இரண்டு ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் நடந்து வந்துள்ளது.

ஜிஎஸ்டி அதிகாரிகள்

கடந்த 2026 பிப்ரவரி மாதத்தில் வாரணாசியில் உள்ள ஜிஎஸ்டி அதிகாரிகள் இந்த நிறுவனத்தின் கணக்குகளில் மிகப் பெரிய முறைகேடுகள் இருப்பதைக் கண்டறிந்தனர். அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நிறுவனத்தின் உரிமையாளராக இருந்த பிரஜாபதிக்கு மே மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

தவறு செய்யாத தனக்கு தண்டனை கிடைத்துவிடுமோ என்ற அச்சத்தில், பிரஜாபதி உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். தனது வறுமையைப் பயன்படுத்தி, யாரோ ஒரு கும்பல் தனது அடையாளத்தைத் திருடி இவ்வளவு பெரிய மோசடியைச் செய்துள்ளதாக கதறி அழுதுள்ளார். இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கவனம்!

சாதாரண மக்களின் அறியாமையை பயன்படுத்தி, அவர்களது கேஒய்சி ஆவணங்களை மிக எளிதாகத் திருடி, சட்டவிரோத பணப் பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்துவது ஒரு தொடர்கதையாகி வருகிறது. வரி ஏய்ப்பு செய்யும் கும்பல்கள், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இது போன்ற அப்பாவி மக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துகின்றனர். எனவே, என்ன தேவையாக இருந்தாலும் உங்களது ஆவணங்களை யாரிடமும் கொடுக்க வேண்டாம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *