இந்திய இளையோர் அணி (U-19) மற்றும் பஞ்சாப் மாநில அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் அமன்பிரீத் சிங் கில் (36), சண்டிகரில் காலமானார். புதன்கிழமை அன்று அவர் உயிரிழந்த நிலையில், அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இவரது மறைவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமன்பிரீத் சிங் கில் ஒரு திறமையான வலது கை மிதவேகப் பந்துவீச்சாளராக அறியப்பட்டார். 2006 முதல் 2008 வரை பஞ்சாப் அணிக்காக 6 முதல்தர போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2007-ல் இங்கிலாந்து, மலேசியா மற்றும் இலங்கை நாடுகளுக்குச் சென்ற இந்திய இளையோர் அணியில் இடம்பெற்றிருந்தார். பல ஒருநாள் போட்டிகளிலும், ஒரு மூன்று நாள் “டெஸ்ட்” போட்டியிலும் விளையாடியுள்ளார். 2008-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் சீசனில், பஞ்சாப் கிங்ஸ் (அப்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப்) அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.
அமன்பிரீத் சிங் மரணம் கிரிக்கெட் உலகினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அமன்பிரீத் சிங் இழப்பு குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனது எக்ஸ் பக்கத்தில், “அமன்பிரீத்தின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் இந்தத் துயரத்தைத் தாங்கும் வலிமையை அந்த இறைவன் வழங்கட்டும்,” எனப் பதிவிட்டுள்ளார்.