Business
oi-Rajkumar R
டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசி தனது பங்குகளை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அதிகபட்சமாக 6.5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான பணிகள் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசு துறை நிறுவனங்களில் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்று எல்ஐசி. காப்பீட்டு சேவையை இந்தியாவில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் வழங்கும் வகையில் எல்ஐசி நிறுவனமானது தொடங்கப்பட்டு மிகப்பெரிய நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
மேலும் பங்குச் சந்தையிலும் எல்ஐசி பங்குகள் எப்போதும் வலுவாகவே இருக்கும். இந்த நிலையில்எல்ஐசியின் பங்குகளை அதிகபட்சம் 6.5% வரை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மை துறை செயலாளர் அருணிஸ் சாவ்லா இதனை தெரிவித்திருக்கிறார்.

எல்ஐசி பங்குகள்
செவ்வாய்க்கிழமை முதல் நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க விண்ணப்பிக்கலாம் என்றும், சில்லறை முதலீட்டாளர்கள் புதன்கிழமை முதல் ஏலத்தில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு முதற்கட்டமாக 2.5 சதவீத பங்குகளை விற்பனைக்கு கொண்டு வருகிறது. மேலும் கிடைக்கும் வரவேற்பை குறித்து கூடுதலாக 4 சதவீத பங்குகளை விற்கும் திட்டத்திலும் ஈடுபட உள்ளது. ஒரு பங்கிற்கான குறைந்தபட்ச விலை 382 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
பங்கு விற்பனை
தற்போது எல்ஐசி நிறுவனத்தின் மத்திய அரசின் பங்கு 96.5 சதவீதமாக உள்ளது. இந்த பங்குகள் முழுமையாக விற்கப்பட்டால் அரசின் பங்கு 90 சதவீதமாக குறையும். பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி விதிகளின்படி எல்ஐசி நிறுவனத்தில் அரசின் பங்குகளை 2027 மே மாதத்திற்குள் குறைந்தபட்சம் 90 சதவீதமாக குறைக்க வேண்டும். இந்த இலக்கை திட்டமிட்ட காலத்திற்குள் அடைய இந்த பங்கு விற்பனை உதவும் என எல்ஐசி தெரிவித்திருக்கிறது.
முதலீட்டு விலகல்
ஒரு பங்கின் விலை 382 ரூபாய் என்ற அடிப்படையில் 6.5 சதவீத பங்குகளும் விற்கப்பட்டால் மத்திய அரசுக்கு சுமார் 26,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு 2121 கோடி அளவுக்கு முதலீட்டு விலகல் (Disinvestment) மூலம் வருவாய் ஈட்டி இருக்கிறது. எல்ஐசி பங்குகளும் வெற்றிகரமாக விற்கப்பட்டால் மத்திய அரசின் மொத்த வருவாய் 47,201 கோடியாக உயரும்.
மத்திய அரசு
2026-2027-ம் நிதி ஆண்டில் முதலீட்டு விலகள் மற்றும் அரசு சொத்துக்களை பணமாக்குதல் (Asset Monetisation) மூலம் சுமார் 80,000 கோடி ரூபாயை திரட்ட மத்திய அரசு இலக்கை நிர்ணயித்துள்ளது. இதுவரை அந்த இலக்கில் சுமார் 35 சதவீதத்தை மத்திய அரசு எட்டியுள்ளது. 2022ஆம் ஆண்டு எல்ஐசியின் ஐபிஓ மூலம் அரசு 3.5% பங்குகளை விற்றது. அதன்படி பொதுமக்களின் பங்கு விகிதத்தை படிப்படியாக உயர்த்துவதற்காக செபி கால அவகாசம் வழங்கியது.
முதலீட்டாளர்கள்
அதன்படி மே மாதத்துக்குள் எல்ஐசி யில் 2027 மே மாதத்திற்குள் எல்ஐசியில் பொது மக்களின் பங்கு 10 சதவீதமாக இருக்க வேண்டும். 2032-குள் இது 25% உயர்த்தப்பட வேண்டும். இந்த புதிய பங்கு விற்பனை மூலம் அந்த இலக்கை திட்டமிட்ட காலத்திற்கு முன்பே அடைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எல்ஐசி பங்குகளை சந்தை விலையை விட குறைந்த விலையில் (ஃபுளோர் ப்ரைஸ்) வாங்கும் வாய்ப்பு இந்த பங்கு விற்பனை மூலம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். அதே நேரத்தில் அரசின் பங்கு குறைவதால் எல்ஐசி யில் பொதுமக்களின் பங்கு விகிதமும் அதிகரிக்கும். இது எல்ஐசி நிறுவனத்தின் பங்குச் சந்தை வர்த்தகத்தில் திரவ தன்மையை (Liquidity) மேம்படுத்தும் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.


