“விஷம் குடிச்சிட்டேன்… செத்துடுவேன்னு பயமா இருக்கும்மா…”
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியில் சுமார் 400 மாணவிகளுடன் இயங்கி வரும் அந்த அரசுப் பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வந்தார் கவிதா (மாணவியின் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). கடந்த 07.09.2026 தேதியன்று காலையில் வீட்டில் படுத்துக் கொண்டிருந்த மாணவியிடம், ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை என்று கேட்டிருக்கின்றனர் அவரது பெற்றோர்.
அதற்கு, `நான் விஷம் குடிச்சிட்டேன்… செத்துடுவேன்னு பயமா இருக்கும்மா…” என்று கவிதா கூறியதில் பதறிப் போன பெற்றோர், அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கவிதா, கடந்த 11.09.2026 அன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

அதையடுத்து உயிரிழப்பதற்கு முன்பு மாணவி கவிதா கொடுத்த மரண வாக்குமூலம் மற்றும் அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், அந்தப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ஜெகதீசன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர் கச்சிரப்பாளையம் போலீஸார்.
சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஆசிரியர் ஜெகதீசன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால்தான் விஷம் குடித்தேன் என்று மாணவி கவிதா மரண வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அதனடிப்படையில் விசாரணை செய்து வருகிறோம்” என்றனர்.