”எனக்கு போட்ட பிச்சையக் கூட ஸ்டாலினுக்கு போடல… “ – துரை வைகோ காட்டம்..! – Kumudam

Spread the love

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ, தேர்தல் வெற்றி என்பது எந்த ஒரு தனிக்கட்சியும் வழங்கும் சலுகை அல்ல என்றும், கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைந்த உழைப்புக்கும், மக்கள் அளிக்கும் வாக்குகளுக்குமே வெற்றி சொந்தமானது என்றும் தெரிவித்தார்.

திமுகவையும், அந்தக் கட்சியில் நீண்ட காலம் பணியாற்றி வரும் தொண்டர்களையும் தான் மதிப்பதாகக் கூறிய அவர், தேர்தல் நேரத்தில் பல்வேறு கூட்டணிக் கட்சிகள் இணைந்து களப்பணியாற்றுவதாக குறிப்பிட்டார். அந்த வகையில், திமுகவின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தாலும், தன்னை எம்.பி.யாக தேர்வு செய்தது மக்களின் வாக்குகள்தான் என துரை வைகோ கூறினார்.

மேலும், “திமுக என்ன மன்னர் கட்சியா? அவர்கள் கொடுக்கும் பிச்சையை பெற்றுத்தான் எம்.பி. ஆக வேண்டுமா?” என்ற கேள்வியை எழுப்பிய அவர், அடுத்த தேர்தலில் மக்கள் யாருக்கு ஆதரவளிக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம் என்றும் தெரிவித்தார். ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள் என்றும், ஒரு கூட்டணிக் கட்சி மற்றொரு கட்சிக்கு பதவி அல்லது வெற்றியை ‘பிச்சையாக’ வழங்கியது போன்ற கருத்து ஜனநாயகத்துக்கும் சமத்துவத்துக்கும் எதிரானது என்றும் அவர் விமர்சித்தார்.

“திராவிட இயக்கத்திலும் பண்ணையார் அரசியல்”

தொடர்ந்து பேசிய துரை வைகோ, பண்ணையார் அரசியலை எதிர்த்து 1967-ல் அண்ணா அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டார். சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் சட்டமன்றம், நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பு உருவான நிலையில், தற்போது திராவிட இயக்கங்களுக்குள்ளேயே மீண்டும் ஆதிக்க அரசியல் உருவாகிவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கும்போது அவர்களின் சமூகப் பின்னணி மற்றும் தேர்தலுக்கான செலவழிக்கும் திறன் போன்றவை கணக்கில் கொள்ளப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.

இதற்கு மாறாக, தமிழ்நாட்ய் அரசியலில் புதிய மாற்றத்தை முதலமைச்சர் விஜய் கொண்டு வந்துள்ளதாக துரை வைகோ பாராட்டினார். ஊழல், லஞ்சம் இல்லாத நிர்வாகத்தை வழங்குவதாகவும் அவர் கூறினார்.

இதன் தொடர்ச்சியாக, திமுக போட்ட பிச்சை என்ற விமர்சனத்தையே திருப்பிப் பயன்படுத்திய துரை வைகோ, “அப்படியே திமுக பிச்சை போட்டதாக வைத்துக்கொண்டாலும், கொளத்தூரில் திமுக தலைவருக்கே மக்கள் பிச்சை போடவில்லையே.. அதற்கு என்ன பதில்?” என கேள்வி எழுப்பினார்.

கூட்டணி செயல்பாடுகளில் தலையிட்ட திமுக

இதற்கு முன்பும் திமுக கூட்டணிக் கட்சிகளின் செயல்பாடுகளில் தலையிட்டதாக துரை வைகோ குற்றம்சாட்டியிருந்தார். குறிப்பாக, விசிக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் விவகாரங்களில் திமுகவின் தலையீடு இருந்ததாக அவர் கூறியிருந்தார்.

காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் வேட்பாளர்கள் மற்றும் தொகுதி சார்ந்த முடிவுகளில் திமுக தரப்பிலிருந்து அழுத்தம் இருந்ததாகவும், இதுபோன்ற காரணங்களால் காங்கிரஸ் தலைமையிடம் திமுக மீது அதிருப்தி ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

துரை வைகோவின் இந்தக் கருத்துகள், திமுக மற்றும் தவெக இடையேயான அரசியல் மோதலுக்கு மத்தியில் கூட்டணிக் கணக்குகள் குறித்த விவாதத்தையும் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *