
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே, நீட் தேர்வு முறைகேடு மற்றும் மேக்கேதாட்டு அணை விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் டெல்லியில் பரபரப்பு நிலவியது. அவைக்குள் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை மற்றும் மாநிலங்களவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.
இதற்கிடையே, நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் கார்க்ரோச் ஜனதா பார்ட்டியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் திரண்டனர். ஜந்தர் மந்தர் மற்றும் பட்டேல் சௌக் பகுதிகளில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல அவர்கள் முயன்றபோது, போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்தனர். கூட்டம் கலைக்க மறுத்ததால் தடியடி நடத்தப்பட்டதுடன், பலர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தில் சிஜேபியினர் மட்டுமல்ல ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களும் பங்கேற்றதால் நிலைமை மேலும் பதற்றமடைந்தது. தடுப்புகளை மீற முயன்ற தலைவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சில பகுதிகளில் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப் புகை குண்டுகளும் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, நீட் விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் வலுவடைந்துள்ளதால், தர்மேந்திர பிரதான், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நீட் விவகாரத்தின் எதிரொலியாக அவர் பதவி விலகலாம் அல்லது வேறு துறைக்கு மாற்றப்படலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது.