பரந்தூர்: “இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது?" – அண்ணாமலை கேள்வி

Spread the love

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட்.24) சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். இது குறித்து பேச திமுக அனுமதி கேட்டது. திட்டம் ரத்து செய்யப்பட்டதால் பேச எதுவும் இல்லை என சபாநாயகர் மறுத்து விட்டார். இதனால் திமுக-வினர் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக வி தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தன் எக்ஸ் பக்கத்தில், “இன்று தமிழகச் சட்டமன்றத்தில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட அரசு முடிவு செய்துள்ளதாகத் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மாற்று இடங்கள் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், சென்னைக்கான 2-வது விமான நிலையத்திற்குப் புதிய இடத்தை உடனடியாகப் பரிந்துரைத்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். ஏனெனில், இந்த இடத்தைத் தேர்வு செய்வதில் ஏற்படும் தாமதம், மாநிலத்தின் வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும்.

விமான நிலையம் அமையவிருந்த பரந்தூர் கிராமம்

பரந்தூர் திட்டத்தைக் கைவிடும் இந்த அறிவிப்பால் ஏற்படும் வாய்ப்பு இழப்புகளை அரசு கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். அரசு உடனடியாக மற்றொரு இடத்தை முடிவு செய்தாலும்கூட, இடத்தைத் தேர்வு செய்து, மத்திய அரசின் ஒப்புதல் பெற்று, டெண்டர் விட்டு, நிலத்தைக் கையகப்படுத்தி, அனைத்து உரிமங்களையும் பெற்று விமான நிலையம் செயல்பாட்டுக்கு வர குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஆகிவிடும். அதற்குள் மற்ற மாநிலங்கள் வளர்ச்சியில் நம்மை விட வெகுதூரம் முன்னேறிவிடும்.

முதலில், தற்போதைய சென்னை விமான நிலையம் இன்றைய தேவைகளுக்கே போதுமானதாக இல்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். நிலப்பரப்பை ஒப்பிட்டுப் பார்த்தால்

  • சென்னை: ~1,300 ஏக்கர்

  • ஹைதராபாத்: ~5,500 ஏக்கர்

  • பெங்களூரு: ~4,000 ஏக்கர்

  • டெல்லி: ~5,100 ஏக்கர்

  • நவி மும்பை: ~2,866 ஏக்கர்

இவ்வளவு சிறிய இடத்தில் அமைந்திருக்கும் சென்னை விமான நிலையத்தில் பயணியர் சேவை சிறப்பாக இருக்க வேண்டும். ஆனால், வருகை பகுதியில் இறங்கி உள்ளூர் போக்குவரத்தைப் பிடிப்பதே இன்று மிகப்பெரிய சிரமமாக உள்ளது.

ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் நுழைவுவாயிலாகச் சென்னை இருந்தது. ஆனால் இன்று, ஆண்டுக்கு 3 கோடி பயணிகளைக் கையாளும் திறனுடன், பயணிப் போக்குவரத்தில் சென்னை 5-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்கள் சென்னைக்கு முன்னே உள்ளன. மேலும், டாக்சிவே (Taxiways) மற்றும் ஏரோபிரிட்ஜ் (Aerobridges) வசதிகள் குறைவாக இருப்பதால், ஏ380 (A380) போன்ற மிகப்பெரிய விமானங்கள் தரையிறங்கும் ‘கோட் எஃப்’ (Code F) தகுதி சென்னைக்கு இல்லை. ஆனால், தெற்கில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களால் இத்தகைய பெரிய விமானங்களைக் கையாள முடிகிறது.

இவற்றைக் கருத்தில் கொண்டு, சென்னைக்கான 2-வது விமான நிலையத்திற்கான இடத்தை அடையாளம் காணும் பணியைத் தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். அரசியல் கட்சிகள் வரலாம், போகலாம். ஆட்சிகள் மாறலாம். ஆனால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிப் பார்க்கும்போது, அன்றைய ஆட்சியாளர்களின் தொலைநோக்குப் பார்வையின்மையால், ஒரு தரம் குறைந்த கட்டிடத்தையே “விமான நிலையம்” என்று சொல்லிக் கொண்டு மக்கள் சிரமப்படும் நிலை வரக்கூடாது.

அத்துடன், பரந்தூர் திட்டத்திற்காக இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு இனி என்ன செய்யப் போகிறது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *