தென்காசின்னு சொன்னாலே நம்ம நினைவுக்கு வர்றது முதல்ல குற்றாலம்தான். அருவி, சாரல், பசுமைன்னு இயற்கையோட அழகை அள்ளிக் கொடுக்கிற குற்றாலத்துக்கு சீசன் நேரத்துல கூட்டமும் அலைமோதும். ஆனா, தென்காசியோட அழகு குற்றாலத்தோட மட்டும் முடிஞ்சிடாது. மாவட்டத்தோட பல பகுதிகள்ல இயற்கையையும் சினிமா நினைவுகளையும் சேர்த்து வைத்திருக்கிற சின்னச் சின்ன அழகான இடங்கள் நிறைய இருக்கு.
அப்படி இப்போ கொஞ்சம் கொஞ்சமா கவனம் பெற ஆரம்பிச்சிருக்கிற இடம்தான் கீழப்புலியூர்ல இருக்கிற ‘அந்நியன் பாறை’.
கீழப்புலியூர் பக்கம் போனாலே ஒரு பக்கம் பசுமையா விரிஞ்சு கிடக்கிற வயல்வெளி, இன்னொரு பக்கம் அமைதியா கிடக்கிற குளம், இதுக்கு நடுவுல கிராமத்து இயற்கைச் சூழல் நம்மள அப்படியே வரவேற்கும். அந்த இயற்கைக் காட்சிகளுக்கு நடுவுல கம்பீரமா நின்னுட்டிருக்கும் அந்தப் பாறைதான் அந்நியன் பாறை.

இதை வெறும் பாறைன்னு சொல்லிட்டு கடந்து போயிட முடியாது. இந்தப் பாறைக்கும் சினிமாவுக்கும் ஒரு சுவாரஸ்யமான தொடர்பு இருக்கு. பாறையில சினிமா பிரபலங்களோட ஓவியங்கள் வரையப்பட்டிருக்குது. அதுமட்டுமல்லாம, ‘அந்நியன்’ திரைப்படத்தோட ஒரு பாடல் காட்சியிலும் இந்தப் பகுதி இடம்பெற்றிருக்கிறது. அதுக்குப் பிறகுதான் இந்தப் பாறை ‘அந்நியன் பாறை’ன்னு அழைக்கப்பட ஆரம்பிச்சிருக்கு.
சினிமா ரசிகர்களுக்கு இந்தத் தகவல் ஆர்வத்தை ஏற்படுத்தும். அதே நேரத்துல, இந்தப் பகுதி மக்களுக்கும் இந்தப் பாறை அவங்களோட ஊருக்கே ஒரு முக்கியமான அடையாளமா மாறியிருக்கு.

இப்போ பாறையும் புதுப்பிக்கப்பட்டு புதுப் பொலிவோட காட்சியளிக்குது. பழைய நினைவுகளை அப்படியே விட்டுட்டு, அதுக்கு ஒரு புது தோற்றம் கொடுத்திருக்கிற மாதிரி இருக்கு. ஆனா, இந்த இடத்தோட அழகு அந்தப் பாறையோட மட்டும் நின்னுடாது. பாறையைச் சுற்றியிருக்கிற இயற்கைக் காட்சிகள்தான் இன்னும் அதிகமா கவனத்தை ஈர்க்குது. கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் பசுமையான வயல்வெளி, பக்கத்துல பரந்து கிடக்கிற குளம், இதமான காற்று… நகரத்தோட பரபரப்புக்கு முற்றிலும் மாறான ஒரு அமைதியான சூழல் இங்கே கிடைக்குது.