
சட்டமன்றத் தோல்விக்கு பிறகு திமுக தலைமை கட்சியை பலப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுப்பட்டு வரும் நிலையில், அதன் முதற்கட்டமாக இன்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிரடியான 9 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. தேர்தல் தோல்விக்கு பிறகு இக்கூட்டம் கூடியதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் எதிர்கால செயல்பாடுகள், தேர்தல் தோல்விக்கான காரணங்கள்,அமைப்பு ரீதியான மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும் முக்கிய ஆலோசனைகள் இக்கூட்டத்தில் பேசப்பட்டது.
மேலும் இந்த கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டிஆர் பாலு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன், ஓபிஎஸ், ஐ பெரியசாமி, எம்ஆர்கே பன்னீர் செல்வம், கோவி செழியன், வாகை சந்திரசேகர், குறிப்பாக மதிமுகவிலிருந்து விலகி திமுக சார்பில் போட்டியிட்ட எம்எல்ஏ செந்தில் செல்வனும் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், திமுகவில் உள்ள மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்தப்படும் என்றும் ஒருவருக்கு 2 மாவட்டச் செயலாளர்கள் பதவி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் அனைத்து பதவிகளுக்கும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் சீனியராக உள்ள 14 மாஜிக்களுக்கு பதவி பறிப்போகும் என்று கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இனி வரும் தேர்தல்களில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்றால் இனி இளைஞர்களுக்கு பதவி கொடுத்து அவர்களை முன்னிறுத்த வேண்டும் என்று அறிவித்தார்.
குறிப்பாக, தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வயது வரம்பு 70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்ட செயலாளர்களாக இருக்ககூடிய மூத்த நிர்வாகிகள் எ.வ.வேலு (வயது 75), சாத்தூர் ராமச்சந்திரன் (77), ரகுபதி (76), ராணிப்பேட்டை காந்தி (80), அனிதா ராதாகிருஷ்ணன் (74), ஆவுடையப்பன் (81), சுந்தர் (71), செஞ்சி மஸ்தான் (71), எஸ்.ஆர்.சிவலிங்கம் (75), முத்துசாமி (77), சாக்கோட்டை அன்பழகன் (72), ராமகிருஷ்ணன் (77), தளபதி (70)உள்ளிட்ட பலரது பதவி பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.
திமுகவின் இந்த அதிரடி முடிவால் சீனியர் மாஜிக்களின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்று அனைவரும் மத்தியில் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.