பல லட்சங்களை அள்ளித்தரும் அரசு! தங்க பத்திர திட்டத்தில் அடிக்கும் ஜாக்பாட்! நாள் நெருங்கிடுச்சே | Sovereign Gold Bond SGB premature return dates announced: What you should know?

Spread the love

Business

oi-Shyamsundar I

சென்னை: மத்திய அரசின் சவரன் தங்கப் பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கான ரிட்டர்ன் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்தவர்கள்.. முதலீட்டுப் பணத்தை அதன் முதிர்வு காலத்திற்கு முன்பாகவே எடுக்கும் வசதி உள்ளது. அதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.

பலருக்கும் Sovereign Gold Bond (SGB) என்றால் என்ன என்ற சந்தேகம் இருக்கும். எளிமையாகச் சொன்னால், இது மத்திய அரசு நடத்தும் ஒரு டிஜிட்டல் தங்க முதலீட்டுத் திட்டம் ஆகும். நாம் கடைகளுக்குச் சென்று நேரடியாகத் தங்க நகைகளையோ அல்லது நாணயங்களையோ வாங்குவதற்குப் பதிலாக, அதற்கு இணையான மதிப்பில் காகித வடிவிலோ அல்லது டிஜிட்டல் வடிவிலோ அரசிடமிருந்து பத்திரமாக வாங்குவதுதான் இந்த சவரன் தங்கப் பத்திரம்.

Sovereign Gold Bond

ஏன் இந்த திட்டம் முக்கியம்?

இதில் பல நன்மைகள் உள்ளன. நகையாக வாங்கும்போது நாம் கொடுக்க வேண்டிய செய்கூலி, சேதாரம் போன்ற கூடுதல் செலவுகள் இதில் கிடையாது. திருடு போகும் என்ற பயமும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் முதலீடு செய்த தங்கம் விலை ஏறுவதோடு மட்டுமில்லாமல், அரசு உங்களுக்கு ஆண்டுக்கு 2.5% வட்டியையும் (ஆறு மாதத்திற்கு ஒருமுறை) உங்கள் வங்கித் கணக்கில் செலுத்திவிடும். இந்தத் திட்டத்தின் மொத்த முதிர்வு காலம் 8 ஆண்டுகள் ஆகும்.

திட்டம் தோல்வி ஏன்?

ஆனால் இந்த திட்டத்தில் தங்கம் வாங்க பலர் ஆர்வம் காட்டவில்லை. அதோடு முக்கியமாக தங்கம் விலை மிக கடுமையாக உயருவது மத்திய அரசுக்கும் கட்டுப்படியாகவில்லை.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ கால அட்டவணையின்படி, இந்த ஜூலை மாதத்தில் மட்டும் மொத்தம் 8 கட்ட தங்கப் பத்திரங்களின் பணத்தை முன்கூட்டியே எடுப்பதற்கான (Premature Redemption) வாய்ப்புகள் வந்துள்ளன. இந்தத் தங்கப் பத்திரங்களை வைத்துள்ளவர்கள், 8 ஆண்டுகள் முடியும் வரை காத்திருக்காமல், 5 ஆண்டுகள் முடிந்த உடனேயே தங்களின் பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

ஜூலை மாதத்தில் யாருக்குப் பணம் கிடைக்கும்?

இந்தத் தங்கப் பத்திரங்களின் காலம் 8 ஆண்டுகள் என்றாலும், அவசரத் தேவைக்காக 5 ஆண்டுகள் முடிந்த பிறகு முதலீட்டாளர்கள் தங்களின் பணத்தை எடுத்துக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதிக்கிறது. ஆனால், நினைத்த நேரத்தில் எல்லாம் பணத்தை எடுத்துவிட முடியாது. அதற்கென ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட தேதிகளை அறிவிக்கும்.

அந்த வகையில், 2019-20 மற்றும் 2020-21, 2021-22 ஆகிய நிதியாண்டுகளில் குறிப்பிட்ட சில கட்டங்களில் (Series) தங்கம் வாங்கியவர்கள், இந்த ஜூலை 2026-ல் தங்களின் பணத்தை எடுக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

எப்போது பணம் எடுக்கலாம்

பணத்தை திரும்பப் பெற நினைப்பவர்கள், அதற்குரிய தேதிகளுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதிகள் இதோ:

2019-20 தொடர் VIII: இதற்கான பணம் ஜூலை 21 அன்று வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஜூன் 20 முதல் ஜூலை 13 வரை மட்டுமே அவகாசம் உள்ளது.

2020-21 தொடர் I: பணம் ஜூலை 28 அன்று கிடைக்கும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 20 ஆகும்.

2020-21 தொடர் II: பணம் ஜூலை 29 அன்று கிடைக்கும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 21 ஆகும்.

2020-21 தொடர் III: பணம் ஜூலை 30 அன்று கிடைக்கும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 22 ஆகும்.

2020-21 மற்றும் 2021-22 (தொடர் I, II, III): இந்த நான்கு பத்திரங்களுக்கும் ஜூலை 31 அன்று பணம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாளாகும்.

பணத்தை எப்படித் திரும்பப் பெறுவது?

பணம் தானாகவே உங்கள் கணக்கிற்கு வந்துவிடாது. நீங்கள் பத்திரங்களை வாங்கிய வங்கி, தபால் நிலையம், பங்குச் சந்தை முகவர்கள் அல்லது ரிசர்வ் வங்கியின் ‘ரீடெய்ல் டைரக்ட்’ தளம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அணுகி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணத்தை எடுப்பதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

நீங்கள் வாங்கிய விலைக்குப் பணம் கிடைக்காது. மாறாக, நீங்கள் பணத்தை எடுக்கும் தேசிக்கு முந்தைய 3 வேலை நாட்களில், சந்தையில் 999 தூய்மை கொண்ட தங்கத்தின் சராசரி விலை என்னவாக இருந்ததோ அந்த விலைக்கே உங்களுக்குப் பணம் கணக்கிடப்பட்டு வழங்கப்படும். இதனால், தங்கம் விலை உயர்ந்திருந்தால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தங்கம் விலை குறைந்திருந்தால் சற்று குறைவாகக் கிடைக்கலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *