இதில், மெல்லக் கற்கும் மாணவர்களே பெருமளவில் எங்கள் வகுப்பறைகளில் இருப்பார்கள். ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இதனால் பயனடைவார்கள். 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆளுமைத் திறன் பயிற்சியும் வழங்குகிறோம். அது வேலைவாய்ப்பு வழிகாட்டுதலாகவும் ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சியாகவும் இருக்கும்.
அதுமட்டுமன்றி, பள்ளிப்படிப்பை முடிக்கும் நிலையில் இருக்கும் 12-ஆம் வகுப்பு மாணவர்களைக் “கல்லூரி கல்விப் பயணம்’ என்று அழைத்துச் செல்கிறோம். கல்லூரிகளுக்கு நேரடியாகக் கூட்டிச் சென்று, அவர்களுக்குக் கல்வியின் மீது ஓர் ஆர்வத்தையும் கனவையும் ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

மேலும், ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தில் நூலக வார விழாவைக் கொண்டாடுகிறோம். நாங்கள் தேர்ந்தெடுத்த பள்ளிகளில் போட்டிகள் நடத்தி, வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறோம். இது தவிர, ஊட்டச்சத்துக் குறைபாடு அனீமியா உள்ள குழந்தைகள் வாழும் பகுதிகளில், அவர்களுக்கு சத்துணவுப் பொருட்களையும் வழங்கி வருகிறோம். தவிர பார்வைத் திறன் குறைபாடுடைய பிள்ளைகள் பயிலும் பள்ளிகளில் எங்களது பணிகளை இன்னும் தீவிரப்படுத்திச் செயலாற்றி வருகிறோம்.