திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். பக்தர்களின் வசதிக்காக சிறப்புக் கட்டண தரிசனம், பூஜை பொருள்கள், பஞ்சாமிர்தம், பிரசாதம் விற்பனை, தங்க தொட்டில் பிரார்த்தனை மற்றும் தங்க தர புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு கட்டண சேவைகளை பழனி தேவஸ்தானம் வழங்கி வருகிறது.
அதோடு மலைக்கோயிலில் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால், நாள் முழுவதும் அன்னதானம், வாகன நிறுத்தம், கிரிவலப்பாதையில் பேட்டரி கார் வசதி உட்பட 28 கட்டணமில்லா சேவைகளும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கட்டண சேவைகளின் மூலமாக கடந்த ஓராண்டில் மட்டும் கோயிலின் வருமானம் 100 கோடியைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கடந்த 2025 ஜூலை முதல் 2026 ஜூன் மாதம் வரையிலான கடந்த ஓராண்டில் ரூ.103 கோடியே 24 லட்சத்து 13,525 வருவாய் கிடைத்துள்ளது. பழனி கோயில் வரலாற்றிலேயே ஓராண்டு வருமானம் ரூ.100 கோடியைக் கடப்பது இதுவே முதன் முறையாகும்
பழனி என்றாலே பஞ்சாமிர்தம் என்பதுபோல, கோயில் வருமானத்தைப் போலவே பஞ்சாமிர்தமும் 63 கோடி ரூபாய் வரை விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கோயில்களிலேயே பழனி பஞ்சாமிர்தத்துக்கு மட்டுமே புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதே, இந்த அளவு விற்பனையானதற்கு காரணம் என்கின்றனர் கோவில் நிர்வாகத்தினர்.
பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தேவஸ்தானம் சார்பில் அபிஷேக பஞ்சாமிர்தம் டப்பாக்களில் விற்பனையும் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.