International
oi-Vigneshkumar
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இந்து கோயில் இடிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோயில் இருந்த இடத்தை அருகில் செயல்படும் மதரஸாவுக்கு பயன்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு இடித்ததாக அங்குள்ள இந்து சிறுபான்மை அமைப்புகளும், உள்ளூர் மக்களும் குற்றம்சாட்டியுள்ளனர். இருப்பினும், கனமழையால் கோயில் இடிந்து விழுந்ததாக பாகிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது அண்டை நாடான பாகிஸ்தானில் இந்து மக்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். இருப்பினும், அங்கு இந்து மக்களுக்கு உரிய உரிமைகள் கிடைப்பதில்லை. மேலும், இந்து சொத்துகள், கோயில்கள் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு வருகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது மீண்டும் பாகிஸ்தானில் நடந்துள்ளது.

கோயில் இடிப்பு
லாகூரில் இருந்து சுமார் 130 கி.மீ தொலைவில் உள்ள நரோவால் மாவட்டத்தின் சிராஜ் கிராமத்தில் பழமையான இந்து கோயில் ஒன்று அமைந்திருந்தது. சுமார் 1,000 சதுர மீட்டர் பரப்பளவில் இருந்த இந்த கோயில் 100 முதல் 125 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. இந்த கோயில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி திடீரென இடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும், காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வரலாற்று சிறப்புமிக்க கோயிலை மீண்டும் கட்ட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
குற்றச்சாட்டு
இதற்கிடையே பிஎம்எம்பி (Pakistan Masiha Millat Party) தலைவர் அஸ்லாம் பர்வேஸ் சஹோத்ரா, கோயில் திட்டமிட்டு இடிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆகஸ்ட் 28ஆம் தேதி பஞ்சாப் கூடுதல் உள்துறை செயலரை சந்தித்து, சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மற்றும் கோயிலை பாதுகாக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்ததாக அவர் தெரிவித்தார்.
அவர் மேலும், “கோயிலை இடித்தவர்கள் தடை செய்யப்பட்ட தீவிர அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்பான டிஎல்பி (Tehreek-i-Labbaik Pakistan) அமைப்பை சேர்ந்தவர்கள். கோயிலை இடித்தது மட்டுமின்றி கையோடு அதன் கலசம், கோயிலின் கட்டுமான பொருட்கள் மற்றும் செங்கற்கள் அகற்றிவிட்டனர். மீண்டும் கோயிலை கட்டக்கூடாது என்பதற்காகவே இதை செய்துள்ளனர்.
மதரஸா
கோயிலுக்கு அருகிலிருந்த நிலம் ஏற்கெனவே ஒரு மதரஸா அமைப்பதற்காக குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. பல ஆண்டுகளாக வாடகை செலுத்தப்படாததாலும், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தப்படாததாலும் அந்த குத்தகை ரத்து செய்யப்பட்டது. இப்போது அந்த மதஸாவுக்காகவே கோயிலை இடித்துள்ளனர்” என்றார்.
இதற்கிடையே மதரஸாவுக்கான குத்தகை உரிமை ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டிருந்ததாக அங்குள்ள இந்து சிறுபான்மை அமைப்பை சேர்ந்த சஹோத்ரா கூறினார். குத்தகை ரத்து செய்யப்பட்டதால் அங்குள்ளவர்களை (மதர்ஸா தரப்பு) வெளியேற்றி சீல் வைக்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அதை உள்ளூர் போலீசார் செயல்படுத்தவில்லை என சஹோத்ரா குற்றஞ்சாட்டுகிறார்.
அங்குள்ள உள்ளூர் இந்து தலைவர் ரத்தன் லால் இது தொடர்பாக கூறுகையில், “கோயில் அமைந்திருந்த இடத்தை பாதுகாக்கவும், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், கோயில் இருந்த இடத்தில் மதரஸா தொடர்ந்து செயல்பட்டு வருவதால், அங்கு செல்லவே இந்து சமூகத்தினர் அச்சப்படுகிறார்கள்” என்றார்.
விளக்கம்
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது. பாகிஸ்தான் மூத்த அதிகாரி ராணா இப்திகார் இது குறித்து, “கோயில் 100 முதல் 125 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. கனமழை காரணமாகவே கோயில் இடிந்து விழுந்து. கோயிலை யாரும் இடிக்கவில்லை. அது தானாக இடிந்து விழுந்தது. மேலும், கோயிலுக்கு அருகிலுள்ள நிலம் மதரஸா அமைப்பதற்காக குத்தகைக்கு விடப்பட்டிருந்தாலும், கோயில் அமைந்திருந்த நிலம் யாருக்கும் குத்தகைக்கு வழங்கப்படவில்லை”