International
-Vigneshkumar
ஜெனிவா: சிந்து நதி நீர் விவகாரத்தில் பாகிஸ்தான் போடும் நாடகத்தை இந்தியா தோலுரித்துக் காட்டியுள்ளது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஒரு நாட்டுடன், ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பைத் தொடர முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், பயங்கரவாத கட்டமைப்புகளைப் பாகிஸ்தான் அழிக்கும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் செயல்பாட்டிற்கு வராது என்பதையும் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இதற்கிடையே UNHRC எனப்படும் ஐநா மனித உரிமைகள் பேரவையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. 1960ஆம் ஆண்டு போடப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்போதைய காலத்திற்கு ஒத்து வராத ஒன்று என்றும், அது “காலாவதியாகிவிட்டது” என்றும் இந்தியா சாடியுள்ளது.

பாகிஸ்தான்
நேற்று ஜூன் 18ம் தேதி நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் பேரவையின் 62வது கூட்டத்தொடரில், இந்தியாவின் சார்பில் முதன்மைச் செயலாளர் அனுபமா சிங் பேசினார். சர்வதேச அரங்கில் இந்தியாவைப் பற்றித் தொடர்ந்து தவறான ஒரு பிம்பத்தை உருவாக்கப் பாகிஸ்தான் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. அந்த புகார்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஐநா அவையில் இந்தியாவின் இந்த அதிரடி நிலைப்பாட்டை அனுபமா சிங் விளக்கினார்.
இந்தியா பதிலடி
இந்தியா மேலும் கூறுகையில், “ஒரு நாடு பயங்கரவாதத்தைத் தனது அரசின் கொள்கையாக வைத்துக்கொண்டு, அதே நேரத்தில் நட்புறவின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நதிநீர் ஒப்பந்தத்தின் பலன்களை அனுபவிக்க முடியாது.. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் ஆதரிக்கும் வரை, அதனுடன் நதிநீர் பகிர்வு போன்ற ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பைத் தொடர முடியாது. 1960இல் போடப்பட்ட ஒரு ஒப்பந்தம், 60 ஆண்டுகளுக்குப் பிறகும் அப்படியே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தர்க்கத்திற்கு எதிரானது. மாறிவரும் உலகச் சூழலுக்கு ஏற்ப அந்த ஒப்பந்தம் மாற்றப்பட வேண்டும் அல்லது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்” என்றார்.
பஹல்காம் தாக்குதல்
சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு தான், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் முடிவை இந்தியா எடுத்துள்ளது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்த நிலையில், அந்த மோதல் முடிவுக்கு வந்த பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் இந்தியா செயல்பாட்டிற்குக் கொண்டு வரும் என்றே பலரும் நினைத்தனர். இருப்பினும். பாகிஸ்தான் தனது மண்ணில் உள்ள பயங்கரவாதக் கட்டமைப்புகளை முழுமையாக அழிக்கும் வரை இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வராது என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் நிறுத்தப்படுவது பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பாதிப்பை ஏற்படுத்தும். பாகிஸ்தானின் 16 மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலங்களில் 80 சதவீதம் சிந்து நதி நீரைத்தான் நம்பியுள்ளது. மேலும், அந்நாட்டின் மொத்த தண்ணீர் நுகர்வில் 93 சதவீதம் இந்த நதி அமைப்பிலிருந்தே கிடைக்கிறது. எனவே, இந்தியா எடுக்கும் இந்த முடிவு பாகிஸ்தானின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத் துறையை நிலைகுலைய செய்யும்.
வேடிக்கையாக இருக்கு
பாகிஸ்தானை மிகக் கடுமையாக விமர்சித்த அனுபமா சிங், பாகிஸ்தானை ஒரு பிராங்கண்ஸ்டைன் நாடு என்று அவர் குறிப்பிட்டார்.. அவர் மேலும், “தானே உருவாக்கிய ஒரு அரக்கன் (பயங்கரவாதம்), தன்னையே தாக்கும்போது அதிர்ச்சியடையும் ஒரு நாடாக பாகிஸ்தான் உள்ளது. பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளித்து இந்தியாவிற்குள் ஊடுருவச் செய்யும் பாகிஸ்தான், சர்வதேச மேடைகளில் தன்னை ஒரு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடாகக் காட்டிக்கொள்வது வேடிக்கையானது” என்று அவர் கூறினார்.
இந்தியா திட்டவட்டம்
அதேபோல பாகிஸ்தான் ஜம்மு-காஷ்மீர் குறித்து எழுப்பிய புகார்களையும் இந்தியா முற்றிலுமாக நிராகரித்தது. ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதி என்று கூறிய அனுபமா சிங், பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்திய பகுதிகளை மீட்பது மட்டுமே இப்போது எஞ்சியிருக்கும் ஒரே பிரச்சனை என்று உறுதிபடத் தெரிவித்தார்.