மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த மொத்தமுள்ள 9 எம்.பி-க்களில் 6 பேர் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்கு தாவியுள்ளனர். நேற்று உத்தவ் தாக்கரே தனது கட்சி எம்.பி-க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தார். ஆனால் இந்த 6 எம்.பி-க்களும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷைச் சந்தித்து தங்களை தனி அணியாக அறிவிக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தபோது, அவர்களில் சிலர் அதில் கலந்து கொள்ளவில்லை. ஆனாலும் உத்தவ் தாக்கரே தரப்பில் ஏற்பாடு செய்த கூட்டதிலும் அந்த சில எம்.பி-க்கள் கலந்து கொள்ளவில்லை.
அணி மாறிய 6 மக்களவை எம்.பி-க்களுக்கும் மாநில அரசு ஒய் பிளஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளது. இது குறித்து சிவசேனா (உத்தவ்) மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவுத் அளித்துள்ள பேட்டியில், “துரோகிகளை மாநில அரசு பாதுகாக்கிறது.

அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியதன் அவசியம் என்ன? கோபத்தில் இருக்கும் சிவசேனா தொண்டர்களிடமிருந்து அவர்களுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது. அவர்களுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு போதுமானது கிடையாது. அவர்களுக்கு விமானப்படை பாதுகாப்பு கொடுக்கவேண்டும்”‘ என்று குறிப்பிட்டார்.
மக்களவை எம்.பி.க்கள் சஞ்சய் தினா பாட்டீல் (மும்பை வடகிழக்கு), சஞ்சய் தேஷ்முக் (யவத்மால்-வாஷிம்), சஞ்சய் ஜாதவ் (பர்பானி), பவுசாஹேப் வக்சௌரே (ஷிர்டி), நாகேஷ் பாட்டீல் அஷ்டிகர் (ஹிங்கோலி) மற்றும் ஓம் பிரகாஷ் ராஜேனிம்பல்கர் (உஸ்மானாபாத்) ஆகியோருக்கு இந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மாநில உளவுத்துறை வெளியிட்ட தகவல்களின்படி, அவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு கொடுக்க முடிவு எடுக்கப்பட்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
கடந்த முறை 2022ம் ஆண்டு சிவசேனாவில் பிளவு ஏற்பட்டபோது இந்துத்துவா கொள்கையை கைவிட்டு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்ததற்காக பிரிவதாக ஏக்நாத் ஷிண்டே தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இப்போது 6 எம்.பி.க்களும் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கொடுத்திருக்கும் கடிதத்தில், சிவசேனாவை உத்தவ் தாக்கரே காங்கிரஸ் கட்சியுடன் இணைந்துவிடுவார் என்ற அச்சம் இருப்பதால் தாங்கள் தனி அணியாக வந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.