International
oi-Vigneshkumar
ஜெனிவா: பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி முனீர் ஆகியோர் அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க சுவிட்சர்லாந்து சென்றிருந்தனர். அங்கு வைத்து முனீரை கொல்ல இஸ்ரேல் சதி திட்டம் தீட்டியதாகவும் கடைசி நேரத்தில் உஷார் அடைந்த பாகிஸ்தான் அந்த சதியில் இருந்து தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த உளவு அமைப்பு என்றவுடன் பலருக்கும் அமெரிக்காவின் FBI தான் நினைவுக்கு வரும். ஆனால், FBIஐ விட பலமான உளவு அமைப்பு என்றால் அது மொசாட். இஸ்ரேல் நாட்டிற்குச் சொந்தமான இந்த உளவு அமைப்பானது வெளிநாட்டு மண்ணில் கூட பல சிக்கலான மிஷன்களை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது.

கொலை செய்யச் சதி?
இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவ தளபதியை இஸ்ரேல் கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாக சில பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற அமைதி மாநாட்டின் போது, பாகிஸ்தான் ராணுவ தளபதி பீல்டு மார்ஷல் ஆசிம் முனிரை குறிவைத்து காலி செய்ய இஸ்ரேல் சதித்திட்டம் தீட்டியதாகவும் அதைப் பாகிஸ்தான் ராணுவம் முறியடித்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் பெபே எஸ்கோபார் இது தொடர்பாகப் பேசி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பெபே எஸ்கோபார் மேலும், “இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘மொசாட்’ இந்த திட்டத்தின் பின்னணியில் செயல்பட்டு. மாநாட்டில் பங்கேற்க சுவிட்சர்லாந்து சென்ற ஆசிம் முனிர் மற்றும் பாகிஸ்தான் தூதுக்குழுவின் பிற உறுப்பினர்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் அரங்கேற்றத் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், இது தொடர்பான தகவல் பாகிஸ்தானுக்கு எப்படியோ முன்கூட்டியே தெரிந்துவிட்டது.
கடைசி நிமிடத்தில் எஸ்கேப்
மிகத் துல்லியமான மற்றும் நம்பகமான இடத்தில் இருந்து தகவல் வந்ததால் பாகிஸ்தான் உஷார் ஆகிவிட்டது. பின்னரே தேவையான நடவடிக்கை எடுத்துத் தப்பித்தது.. இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இஸ்ரேலுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. ஓமனில் உள்ள இடைத்தரகர்கள் மூலமாக இஸ்ரேலுக்கு நேரடியாக அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்டும் அந்த எச்சரிக்கையில்.. எங்கள் நாட்டுக் குழுவுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், உங்கள் நாட்டை உலக வரைபடத்திலிருந்தே அழித்துவிடுவோம் என்று பாகிஸ்தான் மிகக் கடுமையான மொழியில் எச்சரித்ததாக எனக்குத் தகவல் வந்தது” என்று பெபே கூறியுள்ளார்.
இஸ்ரேல்- பாகிஸ்தான்
இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான் இடையே நல்லுறவு இருந்ததே இல்லை. பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டைப் பாகிஸ்தான் எடுத்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கே நிலவி வருகிறது. இந்த பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்போது வளைகுடாவில் உள்ள கள நிலவரமானது மிகவும் மாறுபட்டதாகவும், உக்கிரமானதாகவும் இருப்பதாக எஸ்கோபார் சுட்டிக்காட்டியுள்ளார்.
பதில் இல்லை
இருப்பினும், இந்த கொலைச் சதி முயற்சி குற்றச்சாட்டு குறித்து இஸ்ரேல் அல்லது பாகிஸ்தான் அரசுத் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் வரவில்லை. அதேபோல் சுவிட்சர்லாந்து, அமெரிக்கா அல்லது பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு உயர் அதிகாரிகளும் இந்த மாநாட்டின் போது இத்தகைய அச்சுறுத்தல் குறித்து எந்தவொரு அவசர எச்சரிக்கையையும் பொதுவெளியில் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் கடந்த வாரம் சுவிட்சர்லாந்துக்குச் சென்றிருந்தன. அப்போது தான் முனீரை காலி செய்ய இஸ்ரேல் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.