பாஜகவிற்கு எதிராக பாமக – விசிக கூட்டணியா? திருமா சொன்னது என்ன? – Kumudam

Spread the love

ஆகஸ்ட் 17 ஆம் தேதி விசிக சார்பில் தமிழ்தேசிய மாநாடு தொடர்பாக மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில்  கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “20ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மறுவரையறை தொடர்பான சட்டம் மீண்டும் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தி நிறைவேற்ற பாஜக அரசு முயற்சிக்கலாம் என தெரிகிறது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தையும் இயற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிகிறது. இந்த சூழலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்னவாக இருக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் உள்ளது” என்றார். 

தொடர்ந்து செய்தியாளர் விஜயன் மீதான விசாரணை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “விஜயன்  ஊடகவியலாளர் அவர் மீது சந்தேகப்பட்டு விசாரணை என்கிற பெயரால் நள்ளிரவு வேளையில் இழுத்தடித்து அலைக்கழித்திருக்கிறார்கள். விசாரிக்க வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை இத்துறைக்கும் அரசுக்கும் உள்ள அதிகாரம் அது. உளவியல் ரீதியாக துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டதை போன்ற ஒரு கருத்து உருவாகி இருக்கிறது அந்த நடைமுறை அவ்வாறு இருக்கிறது இந்த போக்கு ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல. முதலமைச்சரின் கவனத்திற்கு இதனை முன் வைக்க கடமைப்பட்டிருக்கிறோம். ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் அல்லது அச்சுறுத்தும் வகையில் காவல்துறையோ பிற துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் செயல்பட அனுமதிக்க கூடாது. விஜயன் அவர்கள் அச்சுறுத்தப்படுவது கவலை அளிக்கிறது இந்த போக்கை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறோம். இந்த போக்கையும் கண்டிக்கிறோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய திருமாவளவன், பாமக தவெக இணக்கமாக செல்வது இடைத்தேர்தலில் இணையும் திட்டமா என்ற கேள்விக்கும் பதிலளித்தார். அதாவது, “அந்த திட்டம் இருக்குமா என அவர்கள் தான் கூற வேண்டும். எல்லோரிடமும் இணக்கமாக இருக்கலாம் கொள்கை வேறு. கொள்கை பகை வேறு, தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டுவது என்பது வேறு” என்று கூறிய அவரிடம், பாஜகவிற்கு எதிராக தவெக -திமுக ஒன்றாக இருக்கலாம் என கூறிய நிலையில் பாஜகவிற்கு எதிராக விசிகவும் – பாமகவும் இணையுமா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
 
”பாமகவின் கடந்த கால நடவடிக்கைகள் பாஜகவை ஒட்டியே இருந்ததால் தான் நாங்கள் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க நேர்ந்தது. யூகமான கேள்விக்கு யூகமான பதில் சொல்ல முடியாது. எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சாதிய மதவாத அரசியலை உயர்த்திப் பிடிக்கின்ற கட்சிகளுடன் தேர்தலுக்காக கூட நாங்கள் கூட்டணி உறவை வைத்துக்கொள்ள மாட்டோம் என்பதில் இன்றைக்கு உறுதியாக இருக்கிறோம். தவெகவுக்கும் , விசிகவுக்கும் நல்ல இணக்கம் நிலவுகிறது. எங்களுக்கு இடையில் எந்த இடைவெளியும் இல்லை”  என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *