Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டன் பொறுப்பை திலக் வர்மா வசம் கொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஹர்திக் பாண்டியா டிரேட் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட சூழலில், திலக் வர்மாவுக்கு வாய்ப்பு அளிக்க மும்பை அணி நிர்வாகம் தயாராகி வருகிறது. இதற்கு சீனியர் வீரர்களின் ஒப்புதலும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்று 6 ஆண்டுகள் கடந்துவிட்டது. 2020ஆம் ஆண்டுக்கு பின் மும்பை அணியால் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு கூட முன்னேற முடியவில்லை. ஹர்திக் பாண்டியாவை பெரும் தொகை கொடுத்து டிரேட் செய்து கொண்டு வந்த போதும் கூட, மும்பை அணியால் சாதிக்க முடியவில்லை. ஹர்திக் பாண்டியாவின் வரவால் அணிக்குள்ளும் பல்வேறு பிரச்சனைகள் உருவாகின.

கடந்த சீசனிலும் கூட மும்பை அணியால் பெயரளவிற்கு கூட வெற்றிகளை பெற முடியவில்லை. சீசனுக்கு நடுவிலேயே ஹர்திக் பாண்டியா ஓய்வு எடுக்கிறேன் என்று சில நாட்கள் விலகி சென்றார். அப்போதே கேப்டன் பதவியில் இருந்தும் விலகும் முடிவை எடுத்துவிட்டார். அதேபோல் மும்பை நிர்வாகமும் அவருக்கு 3 சீசன்களில் வாய்ப்பு கொடுத்துவிட்டது. அந்த வாய்ப்புகளில் மிகப்பெரிய சொதப்பலை செய்துவிட்டார்.
இதனால் ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்யும் முடிவுக்கு மும்பை அணி வந்துவிட்டது. ஹர்திக் பாண்டியாவை ரிலீஸ் செய்வதால் எந்த லாபமும் மும்பை அணிக்கு இருக்காது. இதனால் டிரேட் செய்வதன் மூலமாக இந்திய வீரர்களை மும்பை அணியால் கைப்பற்ற முடியும். இதனால் ஹர்திக் பாண்டியாவை வாங்க சிஎஸ்கே, கேகேஆர் அணிகள் ஆர்வம் காட்டியுள்ளன.
இதனிடையே மும்பை அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அடுத்த வாரத்தில் நடக்கவுள்ளது. ஆகாஷ் அம்பானி, ஜெயவர்தனே உள்ளிட்டோர் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் பயிற்சியாளர் தொடங்கி கேப்டன், வீரர்கள் என்று அனைவரின் செயல்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக பேசப்பட உள்ளது.
அதேபோல் அடுத்த கேப்டனையும் அடையாளம் காண மும்பை அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. அதில் பும்ரா மற்றும் திலக் வர்மா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. பும்ரா ஏற்கனவே அதிக வேலைப்பளு காரணமாக கேப்டன் பதவியை நிராகரித்திருக்கிறார். இதனால் மும்பை அணியின் புதிய கேப்டனாக திலக் வர்மா நியமனம் செய்யப்பட வாய்ப்புகள் கூடியுள்ளது.