4. இங்கே மூகாம்பிகைக்கு அபிஷேகம் கிடையாது; அலங்காரம், புஷ்பாஞ்சலி உண்டு. லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் நிகழ்கிறது. அபிஷேகத்தின்போது லிங்கத்தின் நடுவில் சொர்ண ரேகையைக் காணலாம். இதில் இடதுபுறம் பிரம்மா, விஷ்ணு, சிவபெருமானும், வலது புறம் சரஸ்வதி, லட்சுமி, பார்வதிதேவியும் அருள்வதாக நம்பிக்கை.
மூகாம்பிகையை சரஸ்வதிதேவியாக பாவித்து, ஆதிசங்கரர் ‘கலா ரோகணம்’ பாடி அருள்பெற்றார். எனவே இங்கு அம்பிகைக்கு வஸ்திரம் சார்த்தி வழிபட்டால் குழந்தைகள், கல்வி-கேள்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.
இந்தத் தலத்தில் கடும் தவத்தில் ஈடுபட்ட ஆதிசங்கரர், எழ முயன்றாராம்; ஆனால் முடியவில்லை. அப்போது, அம்பிகையே வந்து அவருக்கு கஷாயம் ஒன்றை வழங்கினாளாம். எனவே, அர்த்தசாம பூஜையின்போது, பிரசாதமாக பக்தர்களுக்கு கஷாயம் வழங்கப்படுகிறது. இந்த கஷாயத்தைச் சாப்பிட்டால் சகல நோய்களும் தீரும் என்கின்றனர்!
5. மூகாம்பிகை அன்னை, ஆதிசங்கரருக்குக் காட்சி தந்த பிறகுதான் அவர் ‘சௌந்தர்ய லஹரி’ எனும் பாடல்களை இயற்றியதாக ஒரு தகவல் உண்டு. ஆதிசங்கரர் அமர்ந்த பீடம் இன்றும் கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் உள்ளது.
6. இயற்கை அழகு கொஞ்சும் சௌபர்ணிகை ஆற்றின் படித்துறையில் விநாயகர் ஆலயம் ஒன்று உள்ளது. இந்த ஆற்றில் நீராடி, கணபதியை வழிபட்ட பிறகுதான் அம்மனின் கோயிலுக்குச் செல்ல வேண்டும். போகும் வழியில், பழைமையான காளி கோயில் ஒன்றும் உள்ளது. இந்தக் கோயிலினுள்ளே, பிரமாண்ட புற்று ஒன்று உள்ளது. இதையும், காளிதேவியையும் வணங்கி, மூகாம்பிகை அன்னையின் கோயிலை அடையலாம்.
7. மூன்று கண்கள், நான்கு கரங்கள் கொண்டு அருளும் இந்த அன்னை தன் கரங்களில் சங்கு, சக்கரத்துடன் அபய, வர முத்திரைகளோடு ஆதிசக்தியாக அருளும் திருக்கோலம் காண்பவரை சிலிர்க்க வைக்கும்.