Cricket
oi-Yogeshwaran Moorthi
சென்னை: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. தொடர்ந்து 3 சீசன்களாக சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் சறுக்கல்களுக்குப் பின்னணியில் இருந்த முக்கிய காரணங்கள் குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதல்முறையாக மனம் திறந்துள்ளார்.
அதில் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், 2025 சீசனில் காயம் காரணமாக தொடரின் பாதிக்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாட முடியாமல் போனது அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அதேபோல் இந்த சீசனிலும் துரதிர்ஷ்டவசமாக அணியின் முதன்மை ‘Playing XII’ல் இருந்த 5 முக்கிய வீரர்கள் தொடரின் பாதி போட்டிகளில் விளையாடவில்லை.

இது அணியின் திட்டங்களையும், காம்பினேஷனையும் முற்றிலும் மாற்றியமைத்தது. ரசிகர்களும் விமர்சகர்களும் கள நிலவரங்களைப் புரிந்து கொள்ளாமல் வெறும் முடிவுகளை மட்டுமே வைத்து மதிப்பிடுகிறார்கள். நீங்கள் ஆர்சிபி போன்ற ஒரு வெற்றிகரமான அணியை எடுத்து கொண்டாலும், அதில் இருக்கும் 3 அல்லது 4 பிரதான வீரர்களை நீக்கிவிட்டால், அந்த அணியின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் பாதிக்கும்.
இந்த மாதிரியான எதார்த்தமான காரணங்களை பலர் கருத்தில் கொள்வதே இல்லை. சிஎஸ்கே கடந்த 15, 16 சீசன்களாகத் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருவதால், ஒவ்வொரு ஆண்டும் அணி பிளே-ஆஃப் செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருப்பது எதார்த்தமானதுதான். ஆனால் சூழ்நிலைகள் எப்போதும் நமக்கு சாதகமாக இருக்காது.
இந்த அணியில் ரன்னர்-அப், பிளே-ஆஃப் தகுதி பெறாதது, கோப்பையை வென்றது என உச்சக்கட்ட வெற்றியையும் பார்த்துள்ளேன், அதே நேரத்தில் பாதாளத்திற்குச் சென்ற மோசமான நாட்களையும் கடந்து வந்துள்ளேன். இருப்பினும், கடந்த 2025 சீசனை ஒப்பிடும் போது 2026-ல் அணி பல விஷயங்களில் முன்னேற்றம் கண்டுள்ளோம்.
இந்தத் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, அடுத்த 2027 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே இன்னும் பலமடங்கு வலிமையுடன் மீண்டு வரும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தோனியிடம் இருந்து நிதானத்தை கற்றுக் கொண்டதாக கூறிய ருதுராஜ் கெய்க்வாட், இதுவா அதுவா என்ற சந்தேகமான முடிவுகளை தோனி கையாளும் விதம் தனக்கு உதவியாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.