உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சிகந்தரா என்ற இடத்தில் வசித்து வந்தவர் சுரேந்திரா. இவரது மனைவி ரூபி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன.
சுரேந்திரா கடந்த மே மாதம் திடீரென காணாமல் போய்விட்டார். இது குறித்து ரூபி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் 40 நாட்களுக்கும் மேலாக விசாரணை நடத்தி வந்தனர்
இது போன்ற வழக்குகளில் மொபைல் போன் அழைப்புகள் மற்றும் நடமாட்டங்களை வைத்துப் போலீஸார் விசாரிப்பார்கள். போலீஸார் ரூபின் வீட்டிற்குச் சென்று விசாரித்தப்போது ரூபி மிகவும் பதட்டமாக இருந்தார். அதோடு தனது கணவரின் சகோதரரையும் உடனே வரவழைத்தார்.
ரூபியின் முன்னுக்குப் பின் முரணான பதில்களால் அவர் மீது சந்தேகம் வலுவடைந்தது.
மனைவியிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீஸார் சில தொழிலாளர்களுடன் அந்த வீட்டின் குளியலறையின் தரையில் புதிதாகப் பூசப்பட்டிருந்த சிமெண்ட் காரை மற்றும் பிளாஸ்டர் உடைத்து, அதற்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த கணவனின் உடலை மீட்டனர்.
உடலின் அழுகிய வாசனை வெளியில் வராமல் இருக்கவும், அக்கம் பக்கத்தினருக்குத் தெரியாமல் மறைக்கவும் கணவனைக் கொலை செய்த பிறகு குளியலறையில் புதைத்துள்ளார்.
இந்தக் கொலையில் மனைவியே முதன்மைக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், உடலைப் புதைப்பதற்கான ஆழமான குழியைத் தோண்டுவது, மண்ணை அகற்றுவது, சிமெண்ட் பூசுவது போன்ற வேலைகளை ஒருவரே தனியாகச் செய்வது கடினம் என்பதால், இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்று ஆக்ரா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
குற்றத்திற்கு உதவிய கூட்டாளிகளைக் கண்டறிய அந்தப் பகுதியின் சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.