India
oi-Halley Karthik
டெல்லி: காங்கிரஸ் அலுவலகத்தில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டபோது.. இடையே குறுக்கீடு செய்வதை போல சோனியா காந்தி நடந்துக்கொண்டார் என்று பாஜக விமர்சித்திருக்கிறது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.. சோனியா காந்தியின் பாவம் மன்னிக்கப்படாது என்று காட்டமாக கூறியிருக்கிறார்.
நாடு முழுவதும் ஆக.15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள இந்திரா பவனில் காங்கிரஸ் சார்பில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அப்போது வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்பட்டது. இந்த விஷயத்தில்தான் காங்கிரஸ் முரண்படுகிறது.

வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே மதச்சார்பற்றதாக இருக்கும். எனவே அதை மட்டும் ஏற்பதாக காங்கிரஸ் கூறி வந்தது. இருப்பினும் வந்தே மாதரம் முழு பாடலுக்கு.. தேசிய கீதத்திற்கு இணையான மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றியிருக்கிறது.
இப்படி இருக்கையில்தான் காங்கிரஸ் அலுவலகத்தில் வந்தே மாதரம் முழு பாடலும் பாடப்பட்டது. அப்போது சோனியா காந்தி கையை நீட்டி ஏதோ சொல்லியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் பரவலாக ஷேரானது. சோனியா காந்தி.. வந்தே மாதரம் பாடலை அவமதித்துவிட்டார் என்று பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இப்படி இருக்கையில்தான் சோனியா காந்தியின் பாவம் மன்னிக்கப்படாது என்று அமித் ஷா கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடப்படுவதை பாதியிலேயே நிறுத்துமாறு சோனியா காந்தி சைகை காட்டியதாக அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜஸ்தானின் சித்தோர்காரில் நடைபெற்ற பொதுக்கூட்டததில் பேசிய அவர், “சோனியா காந்தி.. 140 மக்களும் உங்களை கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் செய்த இந்த பாவத்தை இந்த நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கி அரசியலுக்காக தேசியப் பாடலை அவமதிக்கிறது. இதற்காக சோனியா காந்தி நாட்டு மக்களிடமும் வந்தே மாதரத்தை இயற்றிய பங்கிம் சந்திர சட்டோபாத்யாவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
இருப்பினும் பாஜகவின் இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் மறுத்துள்ளது. வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்படடதாகவம் மக்களின் கவனத்தை திசை திருப்பவே பாஜக இத்தகைய பொய் புகார்களை கூறுவதாகவும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.