3 ஆகஸ்ட் 2026 நிலவரப்படி, கர்நாடகாவின் கே.ஆர்.எஸ் அணையில் 23.078 டி.எம்.சி, கபினியில் 18.610 டி.எம்.சி, ஹாரங்கியில் 7.827 டி.எம்.சி மற்றும் ஹேமாவதியில் 28.022 டி.எம்.சி என மொத்தம் 77.537 டி.எம்.சி மொத்த நீர் இருப்பு (பயன்பாட்டு நீர் இருப்பு 67.517 டி.எம்.சி) உள்ளது. எனவே, விகிதாச்சார அடிப்படையில் பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீரைத் தனது அணைகளில் இருந்து திறந்து விடுவதில் கர்நாடக அரசுக்கு எந்தச் சிரமமும் இருக்காது.
இதற்கிடையே, கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிக மழை பெய்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விகிதாச்சாரப்படி பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்குக் கிடைக்கவேண்டிய நீரின் அளவு 26.954 டி.எம்.சி ஆகும். இதன்படி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அளித்த உத்தரவான 4.536 டி.எம்.சி மிகக் குறைவாகும்.

இச்சூழலில், விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நீரை கர்நாடக அரசு அளிக்க தவறியதாலும் தமிழ்நாட்டிற்கு விகிதாச்சாரப்படி கிடைக்க வேண்டிய நீர் 26.954 டி.எம்.சி என்பதாலும், மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (03.08.2026) உச்சநீதிமன்றத்தினை அணுகி தக்க உத்தரவைப் பெற அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி இப்பிரச்சனைக்குத் தீர்வு காணவும் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை குறித்த காலத்தில் பெறவும் உச்சநீதிமன்றத்தில் இன்று (03.08.2026) மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.