ராஜஸ்தான் மாநிலம், பலோத்ராவில் உள்ள பச் பத்ரா (Pachpadra) சுத்திகரிப்பு நிலையத்தை பிரதமர் மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கவிருந்த நிலையில், இன்று அங்கு ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாகத் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) மற்றும் ராஜஸ்தான் அரசு இணைந்து ஒருங்கிணைந்த பச் பத்ரா சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் வளாகத்தை உருவாக்கின. இது இந்தியாவின் முதல் “கிரீன்ஃபீல்ட்’ ஒருங்கிணைந்த திட்டமாகும். 2013 அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் சோனியா காந்தியால் ரூ.37,230 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. 2018-ல் நடந்த ஆட்சி மாற்றத்திற்குப் பின், பிரதமர் மோடி இத்திட்டத்தை ரூ.43,129 கோடி மதிப்பீட்டில் மறுதொடக்கம் செய்து வைத்தார்.
இந்த ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் வெறும் எரிபொருள் உற்பத்தியோடு மட்டுமல்லாமல், பாலிப்ரோப்பிலீன், பாலிஎத்திலீன், பென்சீன் மற்றும் புடாடீன் போன்ற முக்கியமான பெட்ரோகெமிக்கல் மூலப்பொருட்களும் இங்கு உற்பத்தி செய்யப்படும் அளவில் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், பிளாஸ்டிக் தளபாடங்கள், விவசாய குழாய்கள், வாகன உதிரிபாகங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் செயற்கை இழைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு முதுகெலும்பாக அமையும் எனக் கருதப்பட்டது.