​”பிரதமர் மோடி தேச விரோத செயலைச் செய்ய நினைக்கிறார்” – குளச்சலில் ராகுல் கடும் தாக்கு!

Spread the love

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து குளச்சல் அருகே லட்சுமிபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிள்ளியூர் வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் வேட்பாளர் தாரகை கத்பர்ட், விளவங்கோடு வேட்பாளர் டி.டி.பிரவீன், தி.மு.க சார்பில் போட்டியிடும் கன்னியாகுமரி வேட்பாளர் மகேஷ், நாகர்கோவில் வேட்பாளர் ஆஸ்டின், பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிடும் சி.பி.எம் வேட்பாளர் செல்லசுவாமி ஆகியோரை மேடையில் அறிமுகப்படுத்தினார், ராகுல் காந்தி. பின்னர் ராகுல் காந்தி பேசுகையில், “சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிர்நீத்த 23 தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றுச் சிறப்புமிக்க எனது பாரத் ஜோடோ யாத்திரையைக் கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் நிறைவு செய்தேன். என் யாத்திரையின் முக்கிய நோக்கம் நாடு முழுவதும் மக்களிடம் ஒற்றுமையை விதைப்பதுதான். பல்வேறு மதங்கள், பல்வேறு சாதிகள், பல்வேறு பண்பாடுகள், பல்வேறு கலாசாரங்கள் உள்ளன. ஒருதாய் மக்களாக வாழ வைக்க வேண்டும் என்பதுதான் யாத்திரையின் நோக்கமாக இருந்தது. நாங்கள் பிரிவினைவாத அரசியலை வளர்க்கும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் எதிர்த்து போராடும் அரசியலை முன்னெடுக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை இந்தியா மாநிலங்களின் ஒன்றியம். அரசியல் சாசனச் சட்டம் அப்படித்தான் அமைந்திருக்கிறது. பல்வேறு மக்களின் மொழி, கலாசாரங்களைப் போற்றிப் பாதுகாக்கும் விதமாக அரசியல் அமைப்பு இருக்க வேண்டும் என விரும்புகிறோம். ஒரு மாநிலம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் எங்களுக்கு முக்கியமானதுதான். இந்தியாவில் பேசப்படும் ஒவ்வொரு மொழிக்கும் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது. இந்தியாவில் பேசப்படும் ஒவ்வொரு மொழியும் இலக்கியப் பொக்கிஷம். தமிழ்மொழிக்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டு வரலாறு உண்டு. அது போன்று பஞ்சாப், உ.பி, வடகிழக்கு, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பேசப்படும் ஒவ்வொரு மொழிக்கும் பெரிய கலாசாரம், பண்பாடு, வரலாறு உண்டு. ஒரு தனிப்பட்ட மொழியின் பண்பாடோ கலாசாரமோ சிதைக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும், அந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களால் ஆளப்பட வேண்டும். ஒவ்வொருவருடைய குரலும் ஒலிக்கப்பட வேண்டும்.

குமரியின் 6 சட்டசபை தொகுதி வேட்பாளர்களுடன் ராகுல் காந்தி

குமரியின் 6 சட்டசபை தொகுதி வேட்பாளர்களுடன் ராகுல் காந்தி

பா.ஜ.க ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே வரலாறு, ஒரே பண்பாடு என அனைத்தையும் ஒற்றை அரசியலுக்குள் அடக்க நினைக்கிறது. இதுதான் எங்களுக்கும், அவர்களுக்குமான வித்தியாசம். தமிழ்நாடு தமிழர்களால் ஆளப்பட வேண்டும். தமிழக ஆண்களும், பெண்களும் தமிழகத்தை ஆள வேண்டும். ஒவ்வொரு மாநிலங்களும் அந்த மாநில நிர்வாகத்தை நடத்த வேண்டும். நம் அரசியல் அமைப்பும் அதைத்தான் சொல்கிறது. அரசியல் சாசனச் சட்டத்தைப் பா.ஜ.க ஏற்றுக் கொள்ளவில்லை. மாநிலக் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாஜக பலவீனப்படுத்தப் பார்க்கிறது. தமிழ்நாட்டைத் தமிழ்நாட்டில் இருந்து ஆள வேண்டும் என நினைக்கிறோம். மணிப்பூர் அமைதியான மாநிலம். அங்கு தீயைப் பற்றவைத்து அங்கு கொளுந்துவிட்டு எரிகிறது. மணிப்பூர் சின்னாபின்னமாக்கப்பட்டதற்கு பா.ஜ.க தான் காரணம். எங்கெல்லாம் வாய்ப்பு உள்ளதோ அங்கு அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டு டெல்லியில் இருந்து ஆளப்பார்க்கிறார்கள். தமிழ் மக்களிடம் அதை நேரடியாகச் சொல்லத் தைரியம் இல்லை. அதற்காகத் தமிழகத்தில் பெரிய வரலாற்றைக் கொண்ட இயக்கத்தைக் கைப்பற்றி உள்ளனர். அ.தி.மு.க தமிழக வளர்ச்சியில் பெரிய பங்காற்றி உள்ளது என்பதை மறுக்கவில்லை. அ.தி.மு.க-வைத் தமிழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய தலைவர்கள் ஒருகாலத்தில் இருந்தார்கள். இன்று அ.தி.மு.க வெற்றுக்கூடாரமாக மாறி உள்ளது. பா.ஜ.க தமிழகத்தில் நுழையும் கருவியாக அ.தி.மு.க மாறிவிட்டது. அ.தி.மு.க தற்போதைய தலைவர்கள் ஊழலில் திழைத்த காரணத்தால் மோடி அரசிடம் முழுமையாகச் சரணாகதி அடைந்துவிட்டனர். பினாமிகளை வைத்துத் தமிழகத்தை ஆள ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மோடியை ஆட்டுவிப்பது போன்று, மோடி எடப்பாடி பழனிசாமியைக் கைவசப்படுத்தி ஆட்டுவிக்கிறார். வீரமான தமிழர்கள் அவர்களை ஒருகாலமும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், சரணடைய மாட்டார்கள் என்று ஆர்.எஸ்.எஸ்க்கு தெரியும் என்பதால் அ.தி.மு.க மூலம் கால்பதிக்க முயல்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *