கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பிறவம் பாம்பாக்குடா குன்னத்தோத் பகுதியைச் சேர்ந்த கே.என். சந்திரன் – ராஜம்மா தம்பதியரின் ஒரே மகள் நிதின் சந்த்.
பி.டெக் படிப்பை முடித்த பிறகு 2008-ம் ஆண்டு உயர்கல்விக்காக பிரிட்டன் சென்றார். அங்கு அவர் பிஎச்.டி படித்துக்கொண்டிருந்த சமயத்தில், பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்த விசா விதிமுறை மாற்றங்களால் அவரது படிப்பு மற்றும் விசா நடைமுறைகளில் சிக்கல் எழுந்தது.
2016-ம் ஆண்டு இந்த விசா விவகாரத்தை எதிர்த்து பிரிட்டன் நாடாளுமன்றக் குழுக்கள் முன் நிதின் சந்தும் அவரது நண்பர்களும் சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுத்தனர். அப்போது பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மார்ட்டின் டே என்பவரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு நிதின் சந்த்க்குக் கிடைத்தது.
அந்தச் சந்திப்புகளின் மூலம் நிதின் சந்த் மீது கொண்ட அன்பை மார்ட்டின் டே முதலில் வெளிப்படுத்தினார். தான் ஏற்கனவே விவாகரத்து பெற்றவர் என்றும், தனக்கு ஒரு மகன் இருக்கிறார் என்றும் வெளிப்படையாகக் கூறினார் நிதின் சந்த். அதை மார்ட்டின் டே ஏற்றுக்கொண்டதை அடுத்து இருவரும் காதலித்தனர்.
மார்ட்டினின் பெற்றோரான மார்கரெட் மற்றும் ரான் ஆகியோரும் இவர்களது காதலை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டனர். குருவாயூர் கோயிலில் வைத்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது நிதின் சந்த்தின் ஆசையாக இருந்தது. விசா நடைமுறைகள் தொடர்ந்து நீடித்ததால், நிதின் சந்த் மற்றும் மார்ட்டின் ஆகியோர் பிரிட்டனிலேயே முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.

நிதின் சந்தின் மகன் வேதிக்கை மார்ட்டினின் பெற்றோரே தங்களின் சொந்தப் பேரனைப் போல அரவணைத்து வளர்த்தெடுத்தனர். தற்போது நிதின் சந்த் பிரிட்டனில் மேலாண்மை ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். தனது கணவருடன் இணைந்து ஸ்காட்டிஷ் தேசியக் கட்சியிலும் (SNP) தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். இவர்களின் மகன் வேதிக் சங்கர், எடின்பரோவில் மூத்த டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டராகப் பணியாற்றி வருகிறார்.