இந்நிலையில், தி ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்கு அளித்த பேட்டியில் ‘பிரேமலு’ இந்தி ரீமேக் பற்றி பகிர்ந்திருக்கிறார் ‘பிரேமலு’ இயக்குநர் கிரீஷ் ஏ.டி. அவர், “ஒரு படம் என்பது ஒரு மனிதனின் கைரேகை போன்றது. ஒரு இயக்குநரின் பாணியை இன்னொருத்தரால் அப்படியே ரீமேக்கோ அல்லது ரீகிரியேட்டோ செய்யவே முடியாது.
என்னையே உதாரணமாக எடுத்துக்கொண்டால், வேணு நாகவள்ளி போன்ற ஒரு இயக்குநர் இயக்கிய படத்தைப் பார்த்த ஒரு நிமிடத்திலேயே என்னால் அடையாளம் கண்டுபிடித்துவிட முடியும். அது எப்படி என்னால் முடிகிறது என்பதை விவரிக்கத் தெரியாவிட்டாலும், அதை என்னால் உணர முடியும்.
ஒரு நல்ல இயக்குநராக இருந்தாலும் சரி, சுமாரான இயக்குநராக இருந்தாலும் சரி, அவர்கள் இருவருக்குமே கண்டிப்பாக ஒரு தனித்துவமான முத்திரை இருக்கும்.
இந்த உலகத்திலேயே குவென்டின் டாரண்டினோதான் அதிக நபர்களால் காப்பியடிக்கப்பட்ட இயக்குநராக இருப்பார். ஆனால், டாரண்டினோவின் பாணியை யாராவது அப்படியே போலி செய்ய முயலும்போது, ‘ஏன் இவர்கள் இவ்வளவு மேலோட்டமாக காப்பி செய்கிறார்கள்?’ என்று எனக்கு யோசனையாக இருக்கும்.
ஒரு படம் நீங்கள் நினைத்த வகையில் வருவதற்கு அந்த இயக்குநரின் ஆளுமைதான் காரணம். அதை வேறொருவரால் நிச்சயமாக உருவாக்க முடியாது. உங்களிடமும் நிச்சயமாக ஒரு தனித்துவமான முத்திரை இருக்கும், அதை நீங்கள் முயற்சி செய்து கண்டறிய முடியும்” எனத் தெரிவித்திருக்கிறார்.