1978-ஆம் ஆண்டு அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், மருத்துவர்.சாரதா மேனன் தனது 98-ஆவது வயது வரை தொடர்ந்து பணியாற்றினார். மனச்சிதைவு நோய் (ஸ்கிசோஃப்ரினியா) மற்றும் இதர கடுமையான மனநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தரமான மருத்துவ சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிக்க, சில சமூக ஆர்வலர்களுடன் இணைந்து மருத்துவர்.சாரதா மேனன் 1984-ஆம் ஆண்டு ‘ஸ்கார்ஃப்- ஸ்கிசோஃப்ரினியா ஆராய்ச்சி அறக்கட்டளையை (SCARF-Schizophrenia Research Foundation)’ சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு நிறுவினார். மனநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்காக உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட உலகின் மிகச்சில கூட்டு மையங்களில் (Collaborating Centre) இதுவும் ஒன்றாகும்.
மனநல நோயாளிகளை விட, அவர்களைப் பராமரிக்கும் குடும்பத்தினர் அடையும் மன உளைச்சல் அதிகம் என்பதை உணர்ந்த மருத்துவர்.சாரதா மேனன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை ஒன்றிணைத்து, அவர்களுக்கு பரஸ்பர தைரியத்தையும், ஆலோசனைகளையும் வழங்க ‘ஆஷா’ (AASHA) என்ற அமைப்பை உருவாக்கினார். இன்றும் இந்த அமைப்பு இயங்கி வருகிறது.
சர்வதேச மனநல மறுவாழ்வுக்கான உலக அமைப்பின் (World Association for Psychosocial Rehabilitation – WAPR) பொதுச் செயலாளராகவும் அதன் இந்தியப் பிரிவின் நிறுவனராகவும் பொறுப்பு வகித்த மருத்துவர்.சாரதா மேனன் இந்திய மனநல மருத்துவ முறைகளை உலக நாடுகளுக்குக் கொண்டு சேர்த்தார்.
சென்னையில் தெருக்களில் ஆதரவற்று அலையும் மனநல பாதிப்புடைய பெண்களை மீட்க உருவான ‘தி ஃபேனியன்’ (The Banyan), ‘அன்பகம்’ போன்ற தொண்டு நிறுவனங்களுக்குப் பின் நின்று ஒரு தாயைப் போல் ஆலோசனைகள் வழங்கி வழிகாட்டினார்.