வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியாவில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ஒரே நாளில் 993 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, 19 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை சென்னையில் 3,239 ரூபாயாக உயர்ந்துள்ளது.

அமெரிக்கா – ஈரான் – இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து மூன்றாவது முறையாக வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மார்ச்சில் 144 ரூபாயும், ஏப்ரலில் 200 ரூபாயும் உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில், 928 ரூபாய் 50 காசாக உள்ள வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு சிலிண்டர் விலை மாற்றமின்றி அப்படியே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வணிக சிலிண்டரின் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் பதிவில், “விலைவாசி உயர்வு நாயகன் பிரதமர் மோடி. மோடியின் வசூல் வேட்டை தொடர்கிறது.

வெறும் 4 மாதங்களில் வணிக சிலிண்டரின் விலை ரூ.1,518 உயர்ந்துள்ளது. மோடி அரசுக்கு மக்களிடமிருந்து பணத்தைப் பறிக்க மட்டுமே தெரியும்” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறது.