Tamilnadu
oi-Velmurugan P
சென்னை: தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 1 முதல் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஏராளமான குறைபாடுகள் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அரசு ஊழியர்கள், இந்த திட்டத்தை எதிர்த்து பல்வேறு நகரங்களில் போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை தமிழக அரசு ஊழியர்கள் எதிர்ப்பது ஏன் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் அளவுக்கு சிகிச்சை பெறும் வகையில் காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இந்தக் காப்பீட்டுத் திட்டம் ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து புதிய காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக அண்மையில் தமிழக அரசின் நிதித்துறை செயலர் எம்.ஏ.சித்திக் வெளியிட்டிருந்த இரு அரசாணைகளில் : தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்-2026 அமல்படுத்தப்படுகிறது.

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் 2026 ஜூலை 1 முதல் 2031-ம் ஆண்டு ஜூன் 30-ம் வரை 5 ஆண்டு காலம் நடைமுறையில் இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்படி, அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் (வாழ்க்கை துணை உள்பட) மற்றும் குடும்ப ஓய்வூதியதார்களும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ரூ.7.50 லட்சம் வரை பணமில்லா முறையில் மருத்துவ உதவி பெறலாம் என்றும் நிதித்துறை செயலர் எம்.ஏ.சித்திக் அரசாணையில் விளக்கம் அளித்திருந்தார்.
46 வகையான தீவிர நோய்கள்
அதேபோல் 46 வகையான தீவிர நோய்களுக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெறலாம் என்றும், இத்திட்டத்தில் 2,992 சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் சேர்க்கப்பட்டுள்ளது என்றும், 1535 தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குறைந்த ஊதியம்
மேலும் அங்கன்வாடி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள் உ்ள்ளிட்ட பணியாளர்களும் இந்த திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள். குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களின் பிரீமியத்தை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும். இந்த புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம், சிபிஎஸ் திட்டத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கும் (வாழ்க்கை துணை உள்பட), தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்ட (டேப்ஸ்) ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும் என்றும் அரசின் அரசாணைகளில் கூறப்பட்டுள்ளது.
ப்ரீமியம் தொகை பிடித்தம்
இந்த திட்டத்திற்கு அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏனெனில் தமிழக அரசின் காப்பீடு திட்டத்தில் ப்ரீமியம் தொகை கட்டாயமாக பிடித்தம் செய்கிறார்கள். இதனால் பல ஆயிரம் கோடி நிதி தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கிறது என்கிறார்கள். கட்டணமில்லா மருத்துவத்தை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், ப்ரீமியம் தொகை பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும் என்று வலியறுத்துகின்றனர். இதற்காகவே தமிழ்நாட்டின் அனைத்து வட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளார்கள்.
644 ரூபாய் பிடிக்கப்படுகிறது
புதிய காப்பீடு திட்டப்படி ஓர் அரசு ஊழியருக்கு ஆண்டுக்கு ரூ.4,500 தவணை தொகையை அவர்களது சம்பளத்தில் இருந்து மாதந்தோறும் ரூ.390 பிடித்தம் செய்து, கூடுதல் தொகையை அரசு செலுத்தி வருகிறது. அதேபோல் ஓய்வூதியருக்கு ஆண்டுக்கு ரூ.7,728 தவணைத் தொகையை ஓய்வூதியத்தில் இருந்து மாதந்தோறும் ரூ.644 பிடித்தம் செய்கிறது. ஆனால் சிகிச்சைக்கான தொகை ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
12 லட்சம் அரசு ஊழியர்களிடம் 128 கோடி
ஒட்டுமொத்தமாக பார்த்தால், தமிழகத்தில் 12 லட்சம் அரசு ஊழியர்கள், 11 லட்சம் ஓய்வூதியதாரர்களிடமிருந்து காப்பீட்டுத் திட்ட மாதத் தவணைக்காக ரூ.128 கோடி அளவுக்கு ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்யப்படுவதாக அரசு ஊழியர்கள் புள்ளி விவரங்களை கூறுகிறார்கள். அதேபோல் சிகிச்சை தொகை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டாலும், எந்தெந்த சிகிச்சைக்கு எவ்வளவு தொகை என்ற விவரம் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்று அரசு ஊழியர்கள் அதிருப்தி தெரிவிக்கிறார்கள்.
கண்புரை, கர்ப்பப்பை அகற்றம் சிகிச்சைகள் நீக்கம்
அதேபோல் கண்புரை, கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சைகள் காப்பீட்டு திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள். அதேபோல் காப்பீடு திட்டத்தில் இல்லாத மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டால் திரும்ப வழங்கும் தொகை 75 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பதையும் அரசு ஊழியர்கள் எதிர்க்கிறார்கள். அரசாணையில் கடந்த காலங்களில் இருந்த கட்டணமில்லா சிகிச்சை, 3 மாதங்களுக்கு ஒருமுறை காப்பீட்டு நிறுவனம் சார்பில் நடத்தப்படும் குறைதீர் கூட்டம் என்ற பதம் இடம்பெறவில்லை என்பதும் அரசு ஊழியர்களின் குறையாக உள்ளது.
கேரளா பாணியை விரும்பும் அரசு ஊழியர்கள்
அதேபோல் கேரளா மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல், மாநில அரசே காப்பீட்டுத் திட்டத்தை கையில் எடுத்து அனைத்து மருத்துவமனைகளிலும் அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் முடிவை அறிவிக்க வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்கு தான் போராடி வருவதுடன், புதிய காப்பீடு திட்டத்தை எதிர்க்கிறார்கள்.

