இந்த நிலையில்தான் நாளை மறுதினம் ஆகஸ்ட் 24-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது என்று சட்டப்பேரவைச் செயலகம் அறிவிப்பை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக, `சபாநாயகர் தேர்வு செய்யப்படும் வரை, அவருக்குரிய அனைத்து அதிகாரங்களும் துணை சபாநாயகருக்கு இருக்கிறது” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் துணை சபாநாயகர் அன்பழகன்.
அ.தி.மு.க-வின் புதுச்சேரி மாநிலச் செயலாளரான அன்பழகன், உப்பளம் தொகுதியின் எம்.எல்.ஏ. இதற்கிடையில், “என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணிக்குள் நிலவும் குழப்பத்தால், தேர்தல் முடிவுகள் வெளியாக மூன்று மாதங்களைக் கடந்தும் இன்னும் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தல் நடத்தப்படவில்லை.
அப்படி இருக்கும்போது தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடத்தாமல், பட்ஜெட் கூட்டம் நடத்துவது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது.

அதனால் அந்தத் தேர்தலை நடத்துவதைத் தவிர, வேறு எந்த காரணங்களுக்காகவும் சட்டசபையைக் கூட்டக்கூடாது என்று தடை விதிக்க வேண்டும்” என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சுப்பிரமணி. அந்த மனு மீதான விசாரணை நேற்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் ஜி.அருள்முருகன் முன்பு வந்தது.
அப்போது, அந்த மனுவிற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர், தலைமைச் செயலாளர் மற்றும் சட்டசபைச் செயலாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் இடைக்கால பட்ஜெட்டின் கால அவகாசம் முடிகிறது. அதற்கு முன்பாகவே முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவு அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.