மே 4-ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகள், தமிழ்நாடு அரசியல் களத்தில் ஏற்படுத்திய தாக்கம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மாறி மாறி திராவிடக் கட்சிகள் வென்று வந்த மண்ணில், முதல் தேர்தலிலேயே இமாலய சாதனை படைத்தது, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்.
சந்தித்த முதல் தேர்தலிலேயே 108 இடங்கள் என்பது யாரும் எண்ணிப் பார்த்திடாத மேஜிக் ‘எண்.’ தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, ஆண்ட கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாலும், ஆட்சி அரியணை கைத்தொடும் தூரத்தில் இருந்தபோது எக்கச்சக்க தடைகள்!
தனிப்பெரும்பான்மை கிடைக்காமல், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை முதல் ஆப்ஷனாக வைத்து காய்நகர்த்திய தவெக, மூன்று நாள் இழுபறிக்குப் பின்னர் நேற்றைய தினம் பெரும்பான்மையை உறுதிசெய்தது. தான் கொடுத்த டாஸ்க்கை கச்சிதமாக முடித்த விஜய்யை, இனியும் ஆட்சி அமைக்க அழைக்காமல் அலைக்கழிப்பது சரியல்ல என்றெண்ணிய பொறுப்பு ஆளுநர், முதல்வராக பதவியேற்க அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து நேரு ஸ்டேடியத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, ‘சி.ஜோசப் விஜய்’ தலைமையிலான அமைச்சரவை பதவியேற்புக்கான ஏற்பாடுகள் நடந்து முடிந்தன. காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுவதாக இருந்தாலும், குறித்த நேரத்துக்கு முன்னதாகவே விழா அரங்குக்கு வந்து ராகுல் காந்தி உள்ளிட்ட அனைவரையும் விஜய் வரவேற்றது பலரையும் ஈர்த்தது.

10 மணி நெருங்கும் நேரத்தில் என்ட்ரி கொடுத்த பொறுப்பு ஆளுநர் அர்லேக்கரை முறையாக வரவேற்று மேடைக்கு ஏறினார் விஜய்.. முதல் நபராய், முதலமைச்சராய்… ‘சி.ஜோசப் விஜய் எனும் நான்’ என விஜய் பதவியேற்க, அரங்கமே ஆர்ப்பரித்து மகிழ்ந்தது. விஜய்யைத் தொடர்ந்து அவரின் தளபதிகளான ஆனந்த், ஆதவ் தொடங்கி முதற்கட்டமாக 9 அமைச்சர்கள் முறையே பதவியேற்றனர். இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பெண் அமைச்சராக கீர்த்தனா பதவியேற்றிருப்பது கூடுதல் சிறப்பு. ஆளுநர் அனைவருக்கும் பதவியேற்பு செய்து வைத்ததைத் தொடர்ந்து, வந்தே மாதரம், ஜன கண மன, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு பதவியேற்பு விழா நிறைவுபெற்றது.