
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு ‘அஸ்லான்’ என்ற பாரசீக பூனைக்குட்டியை ஸ்ருதி தத்தெடுத்துள்ளார். ஆரம்பத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதனை வளர்த்து வந்த நிலையில், வீட்டிற்கு வந்த சில நாட்களிலேயே முகத்தில் கடுமையான தோல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
முதலில் உணவு காரணமாக இருக்கலாம் என நினைத்த ஸ்ருதி, பின்னர் தோல் மருத்துவரை அணுகியுள்ளார். அப்போது பூனையின் ரோமம் மற்றும் உமிழ்நீர் தனது ஒவ்வாமைக்கு காரணமாக இருக்கலாம் என்பதை அறிந்துள்ளார்.
இதையடுத்து பூனையின் முடியை குறைப்பது, வீட்டில் ஏர் பியூரிஃபையர் பயன்படுத்துவது, பூனைக்குட்டியை அடிக்கடி சுத்தம் செய்வது உள்ளிட்ட பல வழிகளில் பிரச்சினையை கட்டுப்படுத்த முயன்றுள்ளார். ஆனால், ஒவ்வாமை குறையவில்லை.
இதனால் அவரது உடல்நிலை மட்டுமின்றி, சருமமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பிரச்சினை தனது வேலை மற்றும் மனநிலையையும் பாதிக்கத் தொடங்கியதாக ஸ்ருதி தெரிவித்துள்ளார். குறிப்பாக சென்னை சென்று மும்பை திரும்பிய பிறகு ஒவ்வாமை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
நிலைமை தொடர்ந்து மோசமடைந்ததால், அஸ்லானின் வளர்ப்புப் பொறுப்பை மீண்டும் அதன் foster தாயிடம் ஒப்படைத்து, அதனை வேறு குடும்பத்திடம் தத்தெடுக்கச் செய்யும் முடிவை ஸ்ருதி எடுத்துள்ளார். இந்த முடிவு தனக்கு மிகுந்த வேதனையையும் குற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதனை ‘தோல்வியடைந்த தத்தெடுப்பு’ என்று பார்க்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ள ஸ்ருதி, சில நேரங்களில் எதிர்பாராத சூழ்நிலைகளால் செல்லப்பிராணிக்கு வேறு ஒரு பாதுகாப்பான வீட்டைத் தேட வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அஸ்லானுக்கு அன்பும் பாதுகாப்பும் நிறைந்த புதிய வீட்டைத் தேடும் முயற்சியில் ஸ்ருதி ஈடுபட்டுள்ளார். செல்லப்பிராணியை வளர்ப்பது என்பது மகிழ்ச்சியுடன் மட்டுமல்லாமல், சில நேரங்களில் எதிர்பாராத சவால்களையும் கொண்டிருக்கலாம் என்பதை அவரது அனுபவம் வெளிப்படுத்தியுள்ளது.